best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Wednesday, December 1, 2010




திருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான்? அதோ, அங்கே ஒரு இளைஞன் நிற்கிறான்! அவனிடம் கேட்டால், விஷயம் தெரியும்! என சிந்தித்தவராய், தம்பி! இங்கே ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்தாயா? என்றார். அந்த இளைஞர் திருமூலரின் பாதங்களில் அப்படியே விழுந்தார். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. குருவே! மன்னிக்க வேண்டும். நான் தான் உங்கள் சீடன் காலாங்கி. நடுத்தர வயது தோற்றத்தில் இருந்தவன் தான், இப்போது இப்படி இளைஞனாகி விட்டேன், என்று அரற்றினான்.திருமூலர் ஆச்சரியத்துடன், காலாங்கி!இதென்ன விந்தை! இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? உன்னை சமைக்கத்தானே சொன்னேன். அதை விட்டுவிட்டு, நீ என்ன செய்தாய்? என்றார். குருவே! தங்கள் உத்தரவுப்படி நான் சமைக்கவே செய்தேன். சோறு பாத்திரத்தின் அடியில் பிடித்து விடக்கூடாதே என்பதற்காக, ஒரு மரத்தின் குச்சியை ஒடித்து கிளறினேன். அவ்வளவு தான்! சோறு கருப்பாகி விட்டது. தாங்கள் வந்தால் அரிசியை பாழாக்கி விட்டாயே மடையா என திட்டுவீர்கள் இல்லையா? அதற்கு பயந்து, சோறை வெளியில் கொட்டவும் தயங்கி, அதை சாப்பிட்டு விட்டேன். அடுத்த கணமே என் முதுமை மறைந்தது. நான் இளம்பிள்ளையாகி விட்டேன், என்றார் காலாங்கி.திருமூலருக்கு ஆச்சரியத்துடன் கோபமும் வந்தது.சோறு என்ன ஆனாலும், என்னிடமல்லவா சொல்லியிருக்க வேண்டும். உண்மையை மறைப்பதற்காக அதை சாப்பிட்டிருக்கிறாய். குருவிடம் சீடன் எதையும் மறைக்க நினைப்பது பாவம். இந்த பாவத்திற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள், என சொல்லி விட்டு அங்கிருந்து அகல முயன்றார். காலாங்கி, திருமூலரின் காலைப் பிடித்தார்.
குருவே! இந்த சிறுவனை மன்னியுங்கள். என்னை பிரிந்து சென்றுவிட்டால், நான் உயிர் தரிக்கமாட்டேன். சற்று பொறுங்கள். உங்கள் முன்னாலேயே என் தவறுக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறேன், என்றவர் தொண்டைக்குள் விரலை விட்டார். சாப்பிட்ட சோறை வாந்தியெடுத்தார். இதைப் பார்த்த திருமூலர், அவர் வாந்தியெடுத்ததை எடுத்து அப்படியே சாப்பிட்டு விட்டார். அடுத்த கணமே அவரும் இளைஞராகி விட்டார். காலாங்கிநாதரும் இளமை மாறாமல் அப்படியே இருந்தார். வயதில் முதியவர்களாக இருந்தாலும், வாலிப முறுக்கைப் பெற்ற இவர்கள் சேலம் அருகிலுள்ள கஞ்சமலையில் தங்கியிருந்தனர். திருமூலரின் காலத்துக்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, மதுரை அருகில் ஏராளமான சித்தர்கள் வசித்த சதுரகிரி மலைக்குச் சென்றார்

கோம்பைச்சித்தர்

முற்றும் துறந்தவர்களாக, ஆடைஅணியும் ஆர்வமில்லாதர்களாக ஆகாயம் போன்று எங்கும் பறந்து செல்லும் தன்மையுடையவர்களாக, பிள்ளைகளையும் பித்தர்களையும் பேய்களையும் போலக்கட்டுப்பாடில்லாமல், புவியில் திரிவார்கள் பூரண ஞானிகளாகிய “சிவன் முக்தர்கள்” என பகவான் சங்கரர் விவேக சூடாமணி என்னும் நூலில் கூறியுள்ளார். இந்த அருளுரையின்படி வாழ்வாங்கு வாழ்ந்து திகழ்ந்தவர் அருள் ஞானி கோம்பை சுவாமிகள்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கோம்பை என்னும் ஊரில் சமதளவாய் என்பவர் ஜமீந்தாராக வாழ்ந்தவர். அவருக்கு மகனாகத் தோன்றியவரே வேலு தளவாய். இளமைப் பருவத்தில் இறைவன் இவர் முன் தோன்றி அருள்பாலிக்க, வேலு தளவாய் பந்த பாசம் என்னும் மாயையை விலக்கி லௌகீக வாழ்க்கையில் பற்றில்லாதவராக பரமஞானம் பெற்றார். கி.பி. 1865 ம் ஆண்டு நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி) அருகே உள்ள வடசேரிக்கு வந்தருளினார்.

சித்தர் அம்சம் பெற்ற சுவாமிகள் நீராடும் வழக்கமுடையவர் அல்ல. அவரது உடலிலிருந்து துர்நாற்றம் வந்ததில்லை. எந்தக்காலக்கட்டத்திலும் ஆடையில்லாமலும் கைகளில் குப்பைக்கூளங்களையும் எச்சில் இலைகளையும் சுமந்து அலைவார். இருந்த இடத்திலிருந்து திடீரென மறைந்து விடுவதும், அதே சமயத்தில் பல்வேறு இடங்களில் காட்சி தருவதும் தமது உடலைப் பல்வேறு கண்டங்களாக பிரிப்பதும் அவற்றைச் சேர்ப்பதும் அவர் செய்த சித்து விளையாட்டு.
கி.பி. 1914ல் நாகர் கோயிலுக்கு வந்த திருவிதாங்கூர் மன்னர் (ஸ்ரீமூலம் திருநாள்) முன்னிலையில் கோம்பை சுவாமிகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக காவல் துறையினர் அவரை வடசேரி சந்தையில் காவலில் வைத்தனர். ஆனால் காவல் துறைக் கட்டுப்பாட்டையும் மீறி மன்னர் முன் தோன்றினார். மன்னன் வணங்கி, புத்தாடை அணிவித்தார். அப்போதே சித்தர் ஆடையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு மறைந்து விட்டார். இதைக் கண்ட மக்கள் பெரும் வியப்பிலாழ்ந்தனர். இவர் பல அற்புதங்கள் செய்துள்ளார்.

தென்காசியைச் சேர்ந்த துறவி ஒருவர் நீண்ட காலமாக அனுபவித்து வந்த குன்மநோயை கொஞ்சம் மணலை அள்ளி அவர் வயிற்றில் தேய்த்ததன் மூலம் குணமடையச் செய்தார். இருந்த இடத்திலிருந்து திடீரென மறைந்து விடுவதும், அதே சமயத்தில் பல்வேறு இடங்களில் காட்சி தருவதும் தமது உடலைப் பல்வேறு கண்டங்களாகப் பிரிப்பதும் அவற்றைச் சேர்ப்பதும் அவர் செய்த சித்து விளையாட்டு. ஆன்மீகத்தில் புரட்சி செய்த ஸ்ரீநாராயணகுருசுவாமிகள் கோம்பை சுவாமிகளிடத்தில் அளவற்ற பக்தியும் பாசமும் கொண்டிருந்தார்கள்.

எல்லோருடைய வணக்கத்திற்கும் உரியவராக விளங்கிய சுவாமிகள் 18-2-1925 அன்று புதன்கிழமை இரவு சுமார் 8.00 மணிக்கு ஏகாதசி திதியில் அண்மையில் யாருமில்லாத சமயத்தில் தம் இகிலோக வாழ்வை நீத்து சமாதி அடைந்தார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து அடியவர்கள் திரளாகக் கூடினர். சமாதிச்சடங்குகள் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கேரளாவில் ஆரண்முளையைச் சேர்ந்த தவத்திரு சுவாமி சுயம்பர்ணானந்தா ஈத்தா மொழி வந்து சேர்ந்தார். அவரது முன்னிலையில் மகாசமாதி சடங்குகள் சிறப்பாக நடந்தன. இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும், நாட்டின் பல பாகங்களிருந்தும் பக்தர்கள் அங்கு வந்து வணங்கி, அருள் பெற்றுச் செல்கின்றனர்.

“ஆதியென்ற மணி விளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தைக் காண வேணும் சோதியென்று துய்யவெளி மார்க்கமெல்லாஞ் சுகம் பெறவே மனோன்மணி யென்னைத்தாள் தன்னை நீதியென்ற பரஞ்சோதி ஆயிபாதம் நிற்குணத்தினின்ற நிலையாருங் காணார் வேதியென்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்குவதும் பூசையிது வீண் போகாதே”
மேற்கண்ட பாடலில் உள்ளமாகிய கோவிலில் இறைவனை இருத்தி, அன்றாடம் சித்த சுத்தியுடன் வழிபட்டால் எல்லா சித்திகளும் கைவரப்பெறலாம் என்பது இராம தேவரின் பூசை விதி முறையின் பொதுக்கருத்தாக அமைகிறது. சிந்தையை அடக்கி சும்மா இருப்பது சுகம் என்பர் யோகிகள். ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இராமதேவர் தன்னுடைய பாடல்களில் மனதை அடக்கவும், உள்ளத்தை ஒருநிலைப்படுத்தவும் உலகின் முழுமுதற் பொருளை வணங்கிவழி காட்டுகிறார்.

இராமதேவர் வாழ்ந்தது நாகப்பட்டினத்தில். அவரது உள்ளமெல்லாம் இறையுணர்வு எப்போதும் நிறைந்திருந்தது. அரபு நாடுகளில் ஏராளமான கற்ப மூலிகைகள் கிடைக்கும் என்றெண்ணி அடிக்கடி அரபு நாடுகளுக்குச் சென்று வந்தார். இராமதேவர் பல சித்தர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இராமதேவன் அரபுமொழியில் 17 மருத்துவ நூல்களை எழுதினார். இராம தேவருக்கு நபிகள் நாயகம் ஒருமுறை காட்சி கொடுத்ததாகக் கூறுகின்றனர். அதன்பின்பு சிலகாலம் சமாதிநிலையில் இருந்தார்.

போகமுனிவர் ஒரு நாள் இராமதேவர் தியானத்திலிருக்கும் போது வந்தார். அப்போது இராமதேவரிடம் “மெக்காவால் யாக்கோபுகளாவும் தமிழ்நாட்டில் இராமதேவராகவும் இருக்கும் சமாதி அடைய வேண்டிய காலம் இதுவல்ல. இன்னும் ஏராளமான பயனுள்ள காரியங்கள் நீ செய்ய வேண்டியுள்ளன. எனவே, அவற்றையெல்லாம் முடித்த பின்பு சமாதியடைவது நல்லது என்றார். போகரின் உபதேசத்தால் இராமதேவர் பல்வேறு அரிய கற்ப மூலிகைகளை பற்றி அறிந்து, அவற்றை சேகரிக்க தமது ஒப்பற்ற சித்தியால் காடுமலைகளையெல்லாம் சுற்றித்திரிந்தார்.

இராமதேவருக்கு சதுரகிரி மலையில் சித்திகள் பல கைகூடியதால் அங்கிருந்து தவம் செய்தார். அவர் சதுரகிரியில் வைத்திய சாஸ்திர நூல்களை தமிழில் எழுதினார்.

இராமதேவர் எழுதிய நூல்கள்:
வைத்திய காவியம் பரிபாஷை தண்டகம் வைத்திய சூத்திரம் நிகண்டு கலைஞானம் அட்டாங்கயோகம் முப்பு சூத்திரம் சிவயோகம் பட்கணி-பரஞானகேசரி வாத சூத்திரம் யாக்கோபுசவுக்காரம் வைத்திய சிந்தாமணி
சதுரகிரி வனத்தில் இராமதேவர் தங்கியதால் இராமதேவர் வானம் என்ற பெயரும் உண்டு. இவர் மெக்காவில் சமாதி அடைந்தார். அழகர் மலையில் சமாதியடைந்ததாக சில நூல்கள் கூறுகின்றன.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்,”



திருமூலர் கைலாயப் பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது. திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி எல்லாம் பெற்றவர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். இவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். சகுனகிரி மலை பல சித்தர்கள் தங்கித் தவம் புரிந்த இடமாகக் கருதப்படுகிறது. சதுரகிரி மலையின் விசேஷத் தன்மை பற்றி நந்தீசுவரர் தான் திருமூலருக்கு எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. நான்கு வேதங்களும் ஒன்று சேர்ந்து ஒரு உருவமாக அமைந்ததால்தான் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்ததாகத் திருமூலரின் சீடரான காலாங்கிநாதர் வருணிக்கிறார். இவரது திருவாக்கில் மலர்ந்த தமிழ் மந்திர தந்திரம் தான் திருமந்திரம். இதனை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார் எனப்படுகிறது. இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார்.




“ஆதிகாலத்திலே தில்லையில் திருமூலர்
அழகர் மலை இராமதேவர்
அனந்தசயனம் கும்பமுனி திருப்பதி
கொங்கணவர் கமலமுனியாகி
சோதிரக் கஞ்சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லுமெட்டுக் குடியில் வான்மீகரோடு ஒர்
நெல்காசியில் நந்திதேவர்
பாதியரிச் சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனிமலை யோகநாதர்,
பரங்குன்ற மதில், மச்ச முனிபொய்யூர் கோரக்கர்
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீசுவரன்கோயிலில் தன்வந்திரி
திகழ் மயூரங்குதம்பை
சித்தருணை யோரிடைக்காடன் சமாதியிற்
சேர்ந்தன ரெமைக் காக்கவே”
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

  • நீராடி, காலைக் கழுவி, வாய் துடைத்து, உண் கலத்தை சுற்றி, நீரிரைத்து உண்பவரே உண்பார். இப்படி செய்யாமல் உண்டாரைப் போல் வாயை கழுவி போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொள்வார்.
  • கால் கழுவின ஈரம் உலர்வதற்கு முன்னே உணவு உண்ண வேண்டும். கால் ஈரம் உலர்ந்த பிறகே படுக்கைக்கு செல்ல வேண்டும். இதுவே அறிவாளர்களின் கொள்கையாகும்.
  • ஒருவன் உண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து, தூங்காமல், அசையாமல், வேறொன்றினையும் பார்க்காமல், பேசாமல், உண்கின்ற உணவை கையாலெடுத்து சிந்தாமல் நன்றாக உண்ண வேண்டும்.
  • நல்லொழுக்கத்தினின்று தவறாத பெரியோர்கள், விருந்தினர்க்கும், மூத்தோர்களுக்கும், பசுக்களுக்கும், பறவைகளுக்கும், பிள்ளைகளுக்கும் உணவு அளிக்காமல் தான் உண்ணமாட்டார்.
  • கிழக்கு திசையும், ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் மற்ற திசைகளும் நல்லவைகளாகும். உச்சிப் பொழுதில் உண்ணுதல் நலம்.
  • படுத்தோ, நின்றோ, வெளியிடத்தில் நின்றோ உண்ணல் ஆகாது. விரும்பி மிகுதியாக உண்ணலும் ஆகாது. கட்டில் மேலிருந்து உண்ணுதல் கூடாது.
  • தம்மிலும் பெரியாருடன் உண்ணும்போது அவர்க்கு முன்னே தாம் உண்ண மாட்டார். முந்தி எழுந்திருக்க மாட்டார். அவரை நெருங்கி அமர்ந்து உண்ணமாட்டார். எல்லா செல்வமும் பெறுவதாயினும் வலப்புறம் அமர்ந்து உண்ணார்.
  • உணவை உண்ணும்போது கசப்பானவைகளை கடைசியிலும் தித்திப்பான பண்டங்களை முதலாகவும் மற்றவைகளை இடையிலும் உண்ண வேண்டும்.
  • வாயை நன்றாக கொப்புளித்து, நன்றாக துடைத்து, முக்குடி குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும்.

பிரணாயாமம்

  1. ஓரங்குலம் உள்ளே அடக்கினால் உலகப்பற்று நீங்கும்.
  2. இரண்டங்குலம் உள்ளே அடக்கினால் ஆனந்தம் உண்டாகும்.
  3. மூன்றங்குலம் உள்ளே அடக்கினால் கவிபாடும் வல்லமை உண்டாகும்.
  4. நான்கு அங்குலம் உள்ளே அடக்கினால் வாக்கு சித்தி உண்டாகும்.
  5. ஐந்து அங்குலம் உள்ளே அடக்கினால் முக்கால ஞானம் உண்டாகும்.
  6. ஆறு அங்குலம் உள்ளே அடக்கினால் கணம் குறைந்து மேலெழும் சக்தி ஏற்படும்.
  7. ஏழு அங்குலம் உள்ளே அடக்கினால் வாயுவேக சக்தி உண்டாகும்.
  8. எட்டு அங்குலம் உள்ளே அடக்கினால் அஷ்டமா சித்திகளை பெறலாம்.
  9. ஒன்பதன்குலம் உள்ளே அடக்கினால் நவ நிதிகளை பெறலாம்.
  10. பத்தங்குலம் உள்ளே அடக்கினால் பத்து உருவங்கள் எடுக்கும் ஆற்றல் உண்டாகும்.
  11. பதினோரு அங்குலம் உள்ளே அடக்கினால் நிழல் இன்றி உலகில் உலாவலாம்.
  12. பனிரெண்டு அங்குலம் உள்ளே அடக்கினால் பிரமரந்திரத்தில் அடங்கும் போது அமுதம் கிடைகிறது.

;;

TIME