best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Sunday, December 26, 2010



சக்திலோகத்தில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சக்தி கணங்கள் ஆனந்தக்களிப்பில் இருந்தனர். அந்த நடனத்தை சக்திலோகத்தில் இருந்த அன்னப்பறவைகளும் ரசித்துப் பார்த்து, அவையும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடின. சிவனும் பார்வதியும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த வேளையில், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலை ஒன்று காகமாக வடிவெடுத்தது. அந்த காகம் அங்கிருந்த அன்னப்பறவைகளின் அழகில் லயித்தது. ஏதாவது, ஒரு அன்னத்துடன் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணியது, நினைத்தது போலவே ஒரு அன்னத்தை அழைக்க, அதுவும் காகத்துடன் உறவு கொண்டது. அந்த அன்னம் அப்போதே கர்ப்பமடைந்து 21 முட்டைகளை இட்டது. அதில் இருந்து 20 அன்னங்களும், ஒரு காகமும் உருவாயின. அந்த காகமே மனித ரூபம் பெற்று காக புஜண்டர் என்னும் சித்தராக மாறியது. நினைத்த நேரத்தில் காகமாக மாறிவிடும் சக்தியும் இந்த சித்தருக்கு இருந்தது.வாரிஷி என்னும் முனிவர் மீது, கணவனை இழந்த பெண் ஒருத்தி காதல் கொண்டாள்.முனிவர் அவளைச் சபித்து விட்டார். கணவனை இழந்த நிலையில் இன்னொருவன் மீது நாட்டம் கொண்டதால் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறப்பதாக! என சொல்லி விட்டார். இதன்படி அந்தப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்த குழந்தை சந்திர வம்சத்தை சேர்ந்தது. அதுவே காகபுஜண்டர் என்னும் சித்தராக மாறியது என்றும் புஜண்டரின் பிறப்பு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
உஜ்ஜயினியில் உள்ள மகாகாலர் (சிவன்) கோயிலுக்கு காகபுஜண்டர் தினமும் செல்வார். ஓம் நமசிவாய என்னும் திருநாமத்தை ஒரு லட்சம் முறை ஓதுவார். சிறந்த பக்தரான இவரது பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த நினைத்த சிவன், திருமாலின் வாகனமான கருடனை அழைத்தார்.கருடனே! இப்பூவுலகில் பிறந்திருக்கும் காகபுஜண்டன் அழிவே இல்லாதவனாக இருப்பான். உலகம் அழிந்தால் தேவர்களும், மனிதர்களும், பூதங்களும் அந்த கல்பத்திற்குரிய பிரம்மனும்கூட அழிந்துவிடுவார்கள் என்பது உலக நியதி. ஆனால், இந்த காகபுஜண்டனுக்கு உலகம் அழிந்தால்கூட, அழிவு வராது. அந்தளவிற்கு அவன் எனது சிறந்த பக்தனாக விளங்குகிறான், என்றார். கருடன் ஆச்சரியத்துடன் பறந்து சென்றான். காகபுஜண்டருக்கோ சிவன் மீதுதான் பக்தி அதிகமே தவிர, திருமால் கோயில்களுக்கு செல்ல மாட்டார். போதாக்குறைக்கு திருமாலின் பக்தர்களையும் மதிக்க மாட்டார். காகபுஜண்டரின் குரு, இதற்காக புஜண்டரைக் கண்டித்தார். எந்த தெய்வமாயினும் சமமே என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால், காகபுஜண்டரோ இதைக் கண்டுகொள்ளவேயில்லை. பொறுமைமிக்க குரு, திரும்பத்திரும்ப அனைத்து தெய்வங்களும் சமமே என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.ஒருமுறை காகபுஜண்டர் மகாகாலர் ஆலயத்தில் சிவனை வணங்கிக்கொண்டிருந்தபோது, அவரது குரு வந்தார். காகபுஜண்டர் குரு வருவதை அறிந்தும்கூட, அவர் மீது கொண்ட கோபத்தால் எழக்கூட இல்லை. திருமாலை வணங்கச்சொல்கிறாரே என்ற கோபம் தான் அது. குருவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிவபெருமானுக்கு கோபம் வந்துவிட்டது. தனது அன்பிற்குரிய பக்தன் என்றுகூட பார்க்காமல், காகபுஜண்டா! குருவுக்கு மரியாதை செய்யாதவன், எனது பக்தனாக இருக்க தகுதியில்லாதவன். நீ இதுவரை ஜபித்த மந்திரங்களின் பலனை இழந்து விட்டாய். திருமாலை மதிக்கும்படி குரு சொன்னதை நீ ஏற்றிருக்க வேண்டும். மேலும் கோபத்தின் காரணமாக குருவிற்கு மரியாதைகூட செலுத்த தவறிவிட்டாய். குருவிற்கு மரியாதை செலுத்தாத நீ பலகாலம் இந்த பூமி யில் பத்தாயிரம் பிறவிகளுக்கு குறையாமல் பிறப்பாய். நரக வேதனை அனுபவிப்பாய், என்றார்.
அசரீரியாக ஒலித்த இந்த குரல் கேட்டு காகபுஜண்டர் நடுங்கி விட்டார். குருவிடம் மன்னிப்பு கேட்டார். குருவும் புஜண்டர் மீது அன்பு கொண்டு சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் தரும்படி கேட்டார். குருவின் மனிதாபிமானம் கண்டு மகிழ்ந்த சிவன், பத்தாயிரம் பிறவிகளை ஆயிரம் பிறவிகளாக குறைத்தார். பிறவிகளை எடுத்தாலும் பிறவிக்குரிய துன்பங்கள் எதுவும் அணுகாது என்றும், தான் ஏற்கனவே வாக்கு கொடுத்ததைப் போல உலகமே அழிந்தாலும் காகபுஜண்டன் அழிய மாட்டான் என்றும் வாக்களித்தார். இப்படி 999 பிறவிகளை எடுத்து முடித்த காகபுஜண்டர், கடைசியாக ஒரு அந்தணரின் வீட்டில் பிறந்தார். அந்த பிறவியில் தன் முந்தைய பாவத்திற்கு பரிகாரமாக ராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்தார். காக வடிவெடுத்து ராமனை பல உலகங்களிலும் தேடி அழைந்தார். அவர் சென்ற உலகங் களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சதுரகிரி மலைக்குச் சென்ற காகபுஜண்டர், போகரின் சீடர்கள் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். சூரசேனன் என்ற சீடன், காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு விஷக்கனியை தவறுதலாக சாப்பிட்டு இறந்தான். அவனை, நாக தாலி என்ற மூலிகையைக் கொண்டு உயிர்பெறச் செய்தார். இப்படி பல அற்புதங்களைச் செய்தார்.உலகம் பலமுறை அழிந்தபோது அதை உச்சியில் இருந்து பார்த்தவர் காகபுஜண்டர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் விதத்தையும், தட்பவெப்ப நிலை மாறுதல் களையும் பற்றி அவர் சில நூல்களில் சொல்லியிருக்கிறார்.நட்சத்திரங்களில் அவிட்டத்திற்கு சொந்தக்காரர் காகபுஜண்டர். ஒருசிலர் காகபுஜண்டரே, சிவனருளால் அவிட்ட நட்சத்திரமாக மாறினார் என்றும் சொல்கின்றனர். தனது கடைசிக் காலத்தை காகபுஜண்டர் திருச்சியிலுள்ள உறையூரில் கழித்ததாகவும், அங்கேயே சமாதியானதாகவும் சொல்கிறார்கள்.



தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பெண்கள் திறமைசாலிகள். தங்களுக்கு கணவனோ, பிறரோ கொடுக்கும் பணத்திலோ, தாங்கள் உழைத்து சம்பாதித்ததிலோ சிறிதளவாவது மிச்சம் பிடித்து வெள்ளியிலோ, தங்கத்திலோ சிறுநகைஒன்றாவது வாங்கி விடுவார்கள். பொன்னனையாளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபக்தையான அவள், கூடல் மாநகராம் மதுரை அருகிலுள்ள திருப்புவனம் என்ற ஊரில் வசித்தாள். அங்குள்ள பூவன நாதர் அவளது இஷ்ட தெய்வம். அவரது ஆலயத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, ஆலயத்துக்கு வரும் சிவனடியார்களுக்கு, தான் ஆடிப்பிழைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவர் களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை யும் கொண்டிருந்தாள். அவளது கண்ணீருக்கு காரணம் தெரிய வேண்டுமே. அவளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. திருப்புவனநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அவருக்கு உற்சவர் சிலை இருந்தால், அதைக்கொண்டு திருவிழா நடத்தலாம். திருவிழா நடந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர் நோக்கி வருவார்கள். கோயிலின் வருமானம் பெருகும். கோயில் விருத்தியாகும். ஆனால், சிலை செய்ய யார் முன்வருவார்கள்? தானே செய்யலாம் என்றால் அதற்கு அந்தளவுக்கு பணமில்லையே! என்ன செய்வது? இதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தபடியே, தன்னையறி யாமல் உறங்கி விடுவாள். நடனமாடும் நேரத்தில் கூட, இந்த சிந்தனை அவளை வாட்டிக் கொண்டிருந்தது.
ஒருநாள், அவளது ஊருக்கு சில சிவனடியார்கள் வந்தனர். அவர்களை தனது இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள் பொன்னனையாள். அடியார்களும், அவளது பக்தியைப் பற்றி ஊரார் சொல்லக் கேள்விப் பட்டு, அவளது இல்லத்துக்கு சென்றனர். அங்கு அனைவருக்கும் உணவு படைத்தாள். சம்பாதிக்கும் பணமெல்லாம், அடியவர்களுக்கு உணவளிப்பதிலேயே செலவழித்து விடுவாள். அவர்கள் சாப்பிட்டது போக மீதமிருந்தால், அதை மட்டுமே சாப்பிடுவது பொன்னனை யாளின் வழக்கம்.அன்று வந்திருந்த அடியவர் களில் ஒரு அடியவர் மிகுந்த தேஜஸுடன் இருந்தார். அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பொன்னனையாளுக்கு உதவியாக இருந்த மற்ற கணிகைகளும், அவளுடன் இணைந்து அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். அழகாக இருந்த அடியவர் மட்டும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தார். அதற்கான காரணம் புரியாத கணிகைகள், பொன்னனையாளிடம் அதுபற்றிக் கூறினர். பொன்னனையாள் அவரருகில் சென்று, சுவாமி! மற்றவர்கள் நான் அளித்த இந்த எளிய உணவை சாப்பிடும்போது, தாங்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே! உணவு சுவையாக இல்லையா? தங்களுக்கு வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? தாங்கள் கேட்பதை நொடியில் சமைத்து தருகிறேன், என்றதும், அந்த அடியவர் சிரித்தார்.
அவரது சிரிப்பில் சொக்கிப் போனாள் பொன்னனையாள். அவரது சிரிப்பு அந்த இடத்தையே ஆனந்தமயமாக்கியது. அம்மையே! உலகுக்கே படியளக்கும் எனக்கு, நீ இன்று படியளந்திருக்கிறாய். அதை நினைத்தேன், சிரித்தேன், என்ற அடியவரின் பேச்சில் இருந்த சூட்சுமம், பொன்னனையாளுக்கு புரியவில்லை. உடனே அடியவர் அவளிடம், வருந்தாதே, மகளே! நீ தந்த உணவின் மணம் என்னைச் சாப்பிடத் தூண்டுகிறது. ஆனால், உணவளிக்கும் போது, பெண்கள் மகிழ்ச்சியான மனநிலையைக்காட்ட வேண்டும். அது முகத்தில் எதிரொளிக்க வேண்டும். உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. ஏதோ, சோகத்தை மனதில் தாங்கிய நீ தரும் உணவை எப்படி என்னால் மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். நான் சொல்வது சரிதானே! உன் மனதை ஏதோ ஒரு கவலை வாட்டுகிறது என்பது உண்மை தானே! என்றதும், அவளது கண்களில் கண்ணீர் வைகை நதியின் கரை புரண்ட வெள்ளம் போல் பெருகியது. ஐயனே! தாங்கள் என் மன நிலையைப் புரிந்து கொண்டீர்கள். ஆனால், இந்த வருத்தம் என் சுயநலம் கருதியது அல்ல. எம்பெருமானுக்கு, ஒரு சிலை வடிக்க வேண்டும். அதைக் கொண்டு உற்சவம் நடத்தி, மக்களை எனது ஊருக்கு ஈர்க்க வேண்டும். இங்கிருக்கும் பூவனநாதர் கோயில் பெரிய அளவுக்கு உயர வேண்டும்.
மன்னாதிமன்னர்களும், பிரபுக்களும் இங்கு வந்தார்கள் என்றால், அவர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு கோயிலை பெரிதாக்குவேன். உற்சவர் சிலையை வடித்து முடிப்பேன். இதெல்லாம், எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை தான், என் முகவாட்டத்துக்கு காரணம். இருப்பினும், தங்கள் முன்னால் கனிந்த முகம் காட்டாமைக்கு வருந்துகிறேன். அடியவர், இந்தச் சிறியவளின் தவறை புறந்தள்ளி, அமுது செய்ய வேண்டும், என அவரது பாதத்தில் விழுந்து வேண்டினாள். அடியவர் அவளைத் தேற்றினாள். அவளது விருப்பம் அவரை மிகவும் கவர்ந்தது. அவர் அவளிடம், மகளே! கலங்காதே. உன் விருப்பம் விரைவில் நிறை வேறும். உன் வீட்டிலுள்ள பாத்திரங்களை எடுத்து வா. சிலைசெய்ய நான் வகை செய்கிறேன், என்றார்.அவள் அந்த சோகத்திலும் நகைத்தாள். சுவாமி! என்னிடம் பித்தளையும், செம்பும், சிறு வெள்ளி பாத்திரமுமே உள்ளன. இதை விற்றால் வெற்றிலை வாங்கக்கூட பணம் கிடைக்காதே, என்றாள். மகளே! நான் சொல்வது உனக்குப் புரியவில்லை. பாத்திரங்களை என் முன்னால் எடுத்து வை. நான் அவற்றில் திருநீறு தூவுகிறேன். இன்றிரவு, அவற்றை தீ மூட்டி அதற்குள் தூக்கிப் போடு. அவை அனைத்தும் என்ன எடை இருக்கிறதோ, அதில் பாதியளவுக்கு தங்கமாக மாறிவிடும். அதைக் கொண்டு நீ சிலை செய்து விடலாம். சாதாரண சிலை வடிக்க இருந்த நீ, உன் பெயரிலுள்ள பொன்னைப் போல, பொன்னாலேயே சிலை வடித்து விடலாம், என்றார். அடியவரின் வாக்கை சிவவாக்காக கருதிய பொன்னனையாள், பாத்திரங்களை எடுத்து வைத்தாள். அவர் திருநீறைத் தூவினார். அவள் அடியவரிடம், சுவாமி! தாங்கள் இன்று இரவு என் வீட்டிலேயே தங்க வேண்டும். பாத்திரங்களை நெருப்பில் போடும்போது, நீங்களும் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும், என்றாள். தாதியின் பேச்சை மறுத்த அடியவர், அம்மா! சிவனடியார்கள் யார் வீட்டிலும் இரவு நேரத்தில் தங்குவதில்லை. நான் மதுரைக்கு புறப்படுகிறேன். அங்குள்ள ஆலயத்தில், சோமசுந்தரக் கடவுளின் பிரகாரத்தில் தங்கியிருப்பேன். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் அங்கு வா, எனச் சொல்லி கிளம்பி விட்டார். பொன்னனையாள் அன்றிரவில் பாத்திரங்களை நெருப்பில் போட்டாள். என்ன ஆச்சரியம்!
தீயிலிட்ட பாத்திரங்கள் உருகி பொன் மட்டும் வெளிப்பட்டது. தீ அணைந்ததும், பொன்னை வாரி எடுத்த பொன்னனையாள், அதை ஒரு சிறந்த சிற்பியிடம் ஒப்படைத்து,சிவனின் உற்சவர் சிலையை வடிக்கச் சொன்னாள். அந்தச்சிற்பியும் அழகிய சிலை வடிவமைத்தார். அதைப் பார்த்த அவளது கண்களில் ஆனந்தக்கண்ணீர் ஆறாய்ப்பெருகியது. சிலையின் அழகில் சொக்கிப்போன அவள், அதன் மேல் ஆசை கொண்டவளாய், சிலையில் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டாள். தன் வீட்டுக்கு வந்து, இந்த அதிசயம் நிகழக்காரணமாக இருந்த சிவனடியாரிடம் சிலையைக் காட்டுவதற்காக எடுத்துக்கொண்டு, மதுரை சென்றாள். இதனிடையே மதுரைக்கு வந்த அந்த அடியவர்,நகர வீதிகளில் அலைந்து திரிந்தார். அப்போது, அவர் ஒரு ஆணை பெண்ணாக்கினார். ஒரு முதியவரை இளைஞனாக்கினார். இரும்பை தங்கமாக்கினார். பிறவியிலேயே பேசாத ஒருவனை பேச வைத்தார். ஊசியை தரையில் நிறுத்தி, அதன் மேல் கால் கட்டை விரலை வைத்து நடனமாடினார். இவரது சித்து வேலைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஊரெங்கும் இவரைப் பற்றி எழுந்த பேச்சு, அப்போது மதுரையை ஆண்ட அபிஷேகப் பாண்டியனையும் எட்டியது. சித்தரை அழைத்து வர ஆட்களை அனுப்பி வைத்தான். என்னைப் பார்க்க வேண்டுமானால், உன் மன்னனை இங்கே வரச்சொல், என சொல்லிவிட்டார் சித்தர்.
மன்னனும் வந்து பார்த்தான். அவரைப் பற்றி அவன் அவரிடமே கேட்டான். என்னை எல்லாம் வல்ல சித்தர் என்று நீ அழைக்கலாம். நானே ஆதியும், அந்தமும் ஆவேன்,என்றார். சித்தரே! உம் சித்து வேலைகளை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக நீரே கடவுள் என்பதைப் போல் பேசுகிறீரே! எங்கே! இந்தக் கோயிலில் இருக்கும் கல்லால் செய்யப்பட்ட இந்த யானை, உம் சக்தியால் கரும்பு தின்னுமா? என்று கேட்டான். ஒரு கட்டு கரும்பை வரவழைக்கச் சொன்னார் சித்தர். கல்யானையின் முன்னால் போட்டார். சாப்பிடு என கண்ஜாடை காட்டினார். அம்மட்டிலே அது உயிர் பெற்று எழுந்து சாப்பிட ஆரம்பித்து விட்டது. மன்னன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். அவனுக்கு புத்திர பாக்கியம் இல்லை. சித்தரிடம் தன் குறையைச் சொன்னான். அடுத்த ஆண்டிலேயே ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானான். இப்படி பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த சித்தரைக் காண வந்த பொன்னனையாள், மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் வணங்கி விட்டு, பிரகாரத்தில் இருப்பதாகச் சொன்ன அடியவரை தேடி அலைந்தாள்.
துர்க்கை சன்னதி அருகில், ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரை உற்று நோக்கிய போது, அவள் வீட்டுக்கு வந்த அடியவர் தான் என்பதில் சந்தேகமில்லாமல் போயிற்று. அவரை வணங்கிய அவள், சுவாமி! என்னை நினைவிருக்கிறதா? தாங்கள், சில மாதங்களுக்கு முன் என் வீட்டுக்கு அமுதுண்ண வந்திருந்தீர்கள். அப்போது, சிவனின் சிலை செய்யும் என் லட்சியத்தை வெளியிட்டேன். ஞாபகப் படுத்திப் பாருங்கள், என்றாள். ஓ! பொன்னனையாளா? நலமாக இருக்கிறாயா? உன் ஆசை பூர்த்தியாகி விட்டதா? என்றார் ஏதுமறியாதவர் போல.அவள் அந்தச்சிலையை அவர் முன்னால் எடுத்து வைத்தாள். பார்த்தாயா! நம்பிக்கையே வாழ்வின் அஸ்திவாரம். நீ, நான் சொன்னதை நம்பி பாத்திரங்களை தீயில் இட்டிருக்கிறாய். நினைத்ததை சாதித்து விட்டாய், என்றதும், சுவாமி, தாங்கள் யார்? தங்கள் பெயர் என்ன? தாங்கள் துறவு மேற்கொண்ட கதையை எனக்குச் சொல்ல வேண்டும், என்றாள் பொன்னனையாள். பெரியவர் சிரித்தார். எனக்கு ஆயிரம் பெயர்கள் இருக்கிறது தாயே! ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக அழைப்பார்கள். சிலர் சிவனே என்பார்கள். சிலர் பரமசிவா என கூப்பிடுவார்கள். இருந்தாலும், இந்தக் கோயிலில் உள்ளவர்கள் சுந்தரேசா என்பார்கள். ஆனால், இந்த எளிய மானிடன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் வல்லபன்,என்றார். அவள் அவரது பாதத்தை மீண்டும் நமஸ்கரித்து, அவரைச் சுற்றிலும் தான் கொண்டு வந்த பூக்களால் பந்தல் போல் அலங்கரித்தாள். அந்த சமயத்தில், அவர் தியானத்தில் இருந்தார். நீண்டநேரம் அப்படியே இருக்கவே, அவரிடம் விடை பெறுவதற்காக, தியானத்தைக் கலைக்க முற்பட்டாள் பொன்னனையாள். ஆனால், அவர் எழவே இல்லை. அப்படியே கற்சிலையாக மாறி விட்டார். அவள் அழுது தீர்த்தாள்.
சுவாமி! தங்களை வணங்க வந்தேன். தங்களையே எங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று, இச் சிலையை பிரதிஷ்டை செய்ய எண்ணியிருந்தேன். தாங்களோ கல்லாய் சமைந்து விட்டீர்களே! இனி,நான் என்ன செய்வேன்? என அவர் மீது விழுந்து கதறினாள். அப்போது அசரீரி ஒலித்தது. மகளே! கலங்காதே. உன் வீட்டுக்கு வந்த நானே சிவன். சித்தராய், இப்பூவுலகில் அமர்ந்து கருணை செய்யவே வந்தேன். மதுரையம்பதியில், நான் இதே பிரகாரத்தில் சித்தராய் இருப்பேன். எனக்கு நீ பூப்பந்தல் இட்டு அலங்காரம் செய்ததைப் போல், யாரெல்லாம் எனக்கு பூப்பந்தல் வழிபாடு செய்கின்றனரோ, அவர்களுக்கெல்லாம் நடக்காது என ஒதுக்கி வைத்த செயல் களைக் கூட வெற்றிகரமாக நிறைவேற்றித் தருவேன், என்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் செல்பவர்கள் சுவாமி பிரகாரத்தில், துர்க்கை சன்னதியை ஒட்டியுள்ள வல்லப சித்தரை தரிசிக்கலாம். சன்னதியில் தியானகோலத்தில் இவர் அமர்ந்திருப்பார். இப்போதும் பூப்பந்தல் வழிபாடு நடக்கிறது. பூக்கூடார வழிபாடு என்று இப்போது சொல்கிறார்கள். இவருக்கு வல்லபசித்தர் என்ற பெயர் தவிர சிவசித்தர், சுந்தரானந்தர் என்ற பெயர்களும் உண்டு. குழந்தையில்லாத பெண்களும், கணவனைப் பிரிந்திருக்கும் பெண்களும், கல்வியில் முதல்நிலைக்கு வர வேண்டும் என விரும்பும் மாணவர்களும் இந்த சித்தரை வணங்கி பூக்கூடாரமிட்டு வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.







திருவாவடுதுறையில் இருந்து கிளம்பிய ஒரு ஒளிக்கீற்று, அந்த இளைஞனின் கண்களை  தாக்கியது.ஆம்...அதே தான்! எனக்கு தேவையான அஷ்டமாசித்திகளை அருளும் தேவதை அங்கு தான் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஒளி கிளம்பியதோ, அந்த இடத்துக்கு நான் சென்றாக வேண்டும். அந்த தேவதையின் தேஜஸே, இப்படி ஒரு வெளிச்சமாக என் கண்களில் பரவியிருக்க வேண்டும். புறப்படுவோம். என் ஆன்மிக சந்தேகங்கள் அனைத்துக்கும் அங்கு தான் விடை கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ந் தான் அந்த இளைஞன்.இன்றைய கேரளத்தில், கொங்கணப்பிரதேசம் என்று சொல்லக்கூடிய பகுதியிலுள்ள காட்டில் அவனது குடில் இருந்தது. அவனது பெற்றோர் வேட்டைக்காரர்கள். வேடர் பரம்பரையில் பிறந்தவன் அந்த இளைஞன். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், இரவோடு இரவாக காட்டை விட்டு கிளம்பியவன், நாட்டுப்புறத்துக்குள் நுழைந்தான். உலகமக்கள் ஆசையில் மூழ்கி, செல்வத்தை சேர்க்க அங்குமிங்கும் ஓடுவதைக் கண்ட அவனுக்கு சிரிப்பும், அழுகையுமாய் மாறிமாறி வந்தது.அட உலகமே! நீ செல்வத்தை சேர்த்து என்ன சாதிக்கப் போகிறாய். சித்திகளை படித்து தேர்ந்தால், இறைவனை அடைந்து விடலாமே! இறைவனிடம் சென்று விட்டால், உனக்கேது பசி, பட்டினி, ஆசை, தூக்கம், துக்கம் இதெல்லாம்... எதன் மீதுமே பற்றின்றி வாழலாமே, என சிந்தித்தபடியே, ஒளி வந்த திசை நோக்கி நடந் தான் அந்த இளைஞன்.தமிழகத் துக்குள் நுழைந்த அவன், தஞ்சாவூர் இருக்கும் பகுதியைத் தாண்டி வந்த போது, திருவாவடுதுறை என்ற புண்ணிய தலம் தென்பட்டது. அங்கே, தன் மீது ஒளியைப் பாய்ச்சிய ஒரு சித்தர் தவத்தில் அமர்ந்திருந்தார். அவரது பாதங்களில் விழுந்து, அவர் கண் விழிக்கட்டுமே என காத்திருந்தான்.அவர் கண்களைத் திறந்தார். வா இளைஞனே! நீ இங்கு வருவாய் என்பதை நான் அறிவேன். உன் பெயர் இன்னதென்று கூட எனக்குத் தேவையில்லை.
நீ கொங்கண தேசத்தில் இருந்து வந்தவன் என்பதால், உன்னை நான் கொங்கணா என்றே அழைப்பேன். அஷ்டமாசித்திகளை அடைய விரும்பி நீ வந்துள்ளாய், அவையே உன்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும் என நம்புகிறாய். அஷ்டமாசித்திகள், என்பவை மனித குலத்துக்கு நீ பல பயனுள்ளவற்றைச் செய்யவும் பயன்படும் என்பதை மறக்காதே, என்றதும், தான் வந்த நோக்கத்தை அப்படியே இந்த சித்தர் புட்டுபுட்டு வைக்கிறாரே! என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த அந்த இளைஞன், குருவே! தங்களை யாரென நான் அறிந்து கொள்ளலாமா? தங்களுக்கு சித்தமானால், இந்த சிறியவனிடம் அதுபற்றி சொல்லுங்கள், என்றான் இளைஞன்.சித்தர் கலகலவென சிரித்தபடியே, கொங்கணா! இந்தக் கட்டையை  போகர் என்று அழைக்கிறது இந்த உலகம், என்றதும், ஆ...போகரா! தாங்கள் சித்தர்களிலேயே உயர்ந்தவர் அல்லவா! உமையவளின் கட்டளைக் கிணங்க, அவளது மகனுக்கே சிலை செய்தவராயிற்றே தாங்கள். நானும் அம்பாள் உபாசகன்... என்று தொடரும் போதே, இடைமறித்த போகர், கொங்கணா! அதையும் நான் அறிவேன். அம்பிகையின் பல வடிவங்களை நேரில் தரிசிக்க நீ எண்ணுகிறாய். அது நடக்குமோ நடக்காதோ என கலங்குகிறாய். அதற்காக அஷ்டமாசித்திகளைக் கற்று, அவற்றில் ஏதேனும் ஒரு வழிமூலம் அவளைப் பார்த்து விடத் துடிக்கிறாய். ஒன்றை மட்டும் மறந்து விடாதே. அம்பிகையை நேரில் காண ஒரே வழி தவம். நீ மனிதர்களே இல்லாத இடத்துக்குச் செல். அங்கே அமர்ந்து தவம் செய். இவ்வுலக சஞ்சாரத்தை மறந்து விடு. அம்பிகை உன்னைக் காண நேரில் வருவாள், என ஆசியருளினார். போகரிடம் பிரியாவிடை பெற்ற கொங்கணர், ஒரு மலைக்குச் சென்றார். அனைவரும் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ தான் தவம் செய்வர். ஆனால், கொங்கணர் ஒரு மலை உச்சியிலுள்ள பாறையில் படுத்து விட்டார். படுத்த நிலையிலேயே கண்மூடினார். அப்படியே, தவத்தில் ஆழ்ந்து விட்டார். போகர் சொன்னபடியே நடந்தது. அம்பாளின் பல வடிவங்களை அவர் நேரில் கண்டார்.அம்பிகையின் வடிவங்களை நேரில் கண்டதன் மூலம், தனது சக்தி அதிகரித்தது போல உணர்ந்த கொங்கணர், தவத்தில் இருந்து எழுந்தார். அவர் கண் திறக்கவும், தன் முன் ஒரு சமாதி இருப்பதைப் பார்த்தார். அந்த சமாதியை மூடியிருந்த பாறை தானாக உருண்டது. அதன் உள்ளிருந்து ஒரு முனிவர் வெளிப்பட்டார். அவரை கொங்கணர் வணங்கினார்.
கொங்கணா! நீ அவசரக்காரனாக இருக்கிறாயே! அம்பிகையின் ஒரு சில வடிவங்களைப் பார்த்ததுமே உன் சக்தி அதிகரித்து விட்டதாக., நீயாகவே கருதிக் கொண்டு, தவத்தைக் கலைத்து விட்டாயே! அம்பிகைக்கு விண்ணிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமான வடிவங்கள் உண்டு. அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டாய். மீண்டும் தவம் செய். அவற்றை நீ காண்பாய், என்றார். அந்த முனிவர் யாரென கொங்கணர் விசாரித்த போது, நான் தான் கவுதமர் என்றார் அம்முனிவர். கண் விழித்து தவம் கலைந்ததால், அம்பிகையின் இன்னும் பல வடிவங்களைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்தாலும், ரிஷி தரிசனமாவது கிடைத்ததே என ஆறுதல் கொண்ட கொங்கணர், மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். ஆனால், அந்த தவம் சில காலமே நீடித்தது. சித்திகளை அடைய வேண்டும் என்ற மனஉணர்வு, தவத்தைக் கெடுத்து விட்டது. கொங்கணர் அங்கிருந்து புறப்பட்டு, தில்லையம்பதியான சிதம்பரத்தை அடைந்தார். இறைவன் ஆகாயமாக எழுந்தருளியிருக்கும் அந்த புண்ணிய பூமியில் அஷ்டமாசித்திகள் வேண்டி யாகம் தொடங்கினார்.அப்போது, யாக குண்டத்தின் முன்னால், இதற்கு முன்னதாகப் பார்த்த கவுதமர் தோன்றினார். கொங்கணா! மீண்டும் தவறு செய்கிறாய். அஷ்டமாசித்திகளை அடைவதால் பலனேதும் இல்லை. அவற்றைப் பயன்படுத்தினால், நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற ஆணவமே உன்னுள் வளரும். தவமே இறைவனை அடைய உயர்ந்த பாதை. தவம் என்றால் கண்மூடி ஓரிடத்தில் அமர்வது என பலரும் தவறாகப் பொருள் புரிந்து கொண்டிருக்கின்றனர். தவத்தின் உண்மைப் பொருளை நீ தெரிந்து கொள்ள சில சந்தர்ப்பங்கள் கிடைக்கும். காத்திரு, என சொல்லிவிட்டு மறைந்தார். கவுதமரின் இந்த விமர்சனம், கொங்கணரைக் கவலை கொள்ளச் செய்தது. நாம், ஏன் இந்த பூமிக்கு வந்தோம். தவத்தின் பொருள் தெரிய சந்தர்ப்பங்கள் வரும் என்றாரே கவுதமர். அதை அறிந்து கொள்ள எங்கே செல்ல வேண்டும்? எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்? இப்படி பல சிந்தனைகள் அவரைக் குழப்பின. ஆனால், தவத்தின் பொருளை அவருக்கு உணர்த்த, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியில் காத்திருந்தாள் ஒரு பெண்.
ஒருமுறை தியானத்தில் அமர்ந்திருந்த கொங்கணர் மீது, உயரே பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று எச்சம் போட்டது. பறக்கும் போதே எச்சமிடுவது பறவை களின் இயல்பு தான். நாம் கூட மரத்தடிகளில் நின்றால், பறவைகள் எச்சமிட்டு நம் உடைகள் அழுக்காகும். அதை துடைத்து விட்டு நடையைக் கட்டுவோம். கொங்கணர் சகல வல்லமை படைத்தவர் இல்லையா? ஆணவத்துடன் அவர் கொக்கை நோக்கிப் பார்த்தார். அவரது பார்வையின் தீட்சண்யம் தாளாமல் கொக்கு சாம்பலாகி உதிர்ந்து விட்டது.தன் தியானத்தைக் கெடுத்த கொக்கை சாம்பலாக்கிவிட்டதில் கொங்கணருக்கு பரமதிருப்தி, அகந்தை எல்லாம் ஏற்பட்டது. தான் தியானம் செய்யும் போது, யாராவது தனக்கு இடைஞ்சல் செய்தால், அவர்களுக் கும் இதே தான் கதி என்பது போல அவரது செய்கை அமர்ந்தது. இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள், அவர் திருவள்ளுவரின் இல்லத்துக்குச் சென்றார்.யார் உள்ளே! எனக்கு பிச்சைப் போடு, பசிக்கிறது. நிறைய வேலை இருக்கிறது, என்று அதட்டலாகப் பேசினார். வள்ளுவரின் மனைவி வாசுகி, வெளியே இருந்து வந்த குரலைக் கேட்டார். அதிகார தோரணையுள்ள முகத்துடன் ஒரு துறவி நிற்பதைப் பார்த்தாள். அவர் கோபத்தில் பேசினாலும், அவள் அடக்கமாக, துறவியே! பொறுக்க வேண்டும், எனது கணவருக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறேன். பர்த்தாவுக்கு பரிமாறும் போது, இடையில் எழுந்து வந்ததே தவறு. இருப்பினும், நீர் ஒரு துறவி என் பதால், என் பர்த்தா இதை பொருட்படுத்தமாட்டார் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். சற்று நேரம் திண்ணையில் அமரும். அவர் சாப்பிட்டதும், உமக்கு உணவெடுத்து வருகிறேன், என்று சொல்லிவிட்டு, அவர் பதிலுக்கு காத்திராமல் விடுவிடுவென வீட்டுக்குள் நடந்தாள். கொங்கணருக்கோ கோபம் எல்லை மீறி விட்டது. மீண்டும் கத்த ஆரம்பித்தார். ஏ பெண்ணே! துறவிகளுக்கு அன்னமிடுவது முதல் கடமை என்பது உனக்குத் தெரியாதா? அதிலும் நான் யார்? சகல சித்திகளும் கைவரப்பெற்றவன். என் தவத்தின் வலிமையை அறியாமல் பேசுகிறாய். உம்... இப்போது, உணவெடுத்து வருகிறாயா?  இல்லை...  உன்னையும்... என்று அவர் சொல்லி முடிக்கவும், கோபமடைந்த வாசுகி, மீண்டும் வெளியே வந்தாள்.
கொங்கணரே! உமக்கு மரியாதை தந்தது தவறாகப் போயிற்றே! என்னை என்ன செய்து விட முடியும் உம்மால்? பதிபக்தியே ஒரு பத்தினிப் பெண்ணுக்கு உயரிய குணம் என்பதை  கூட உணராத துறவியே! என்னைக் கொக்கென்று நினைத்துக் கொண்டீரா? என்றதும், கொங்கணருக்கு தூக்கி வாரிப்போட்டது. இவளுக்கு எப்படி தெரிந்தது என் பெயர் கொங்கணன் என்று! அத்துடன், இவள் கொக்கை எரித்த விஷயத்தை எப்படி அறிந்தாள்? அவர் அதிர்ச்சியுடன் அவள் முகத்தை ஏறிட்ட போது, கொங்கணரே! உம் சிந்தனை எனக்குப் புரிகிறது. ஒரு பெண் இறைவனை அடைய வேண்டுமானால், தவம் எதுவும் செய்யத் தேவையில்லை, பூஜை, புனஸ்காரங்கள் தேவையில்லை. கணவருக்கு பணிவிடை செய்வதே ஒரு பெண்ணுக்கு உயரிய தவம். நீர் தவம் என்றால் என்ன என்பது பற்றி அறியத்தானே இப்படி சுற்றித் திரிகிறீர்! என்னையும் விட உயர்ந்த ஒரு தபஸ்வி இந்த ஊரில் இருக்கிறார், என்றதும் கொங்கணர் அவள் முகத்தை ஆர்வத்துடன் நோக்கினார். தாயே! நீ என் அறிவுக்கண்ணை திறந்தது போல் இருக்கிறது. என் ஆணவம் அழிந்தது. அந்த தபஸ்வியை நான் பார்க்க வேண்டும். தவம் பற்றி அவரிடம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் தவம் செய்து கொண்டிருப்பார்? என்றதும், வாசுகி கலகலவென சிரித்தாள். சுவாமி! அவர் தாடியும், ஜடாமுடியும் தரித்து கண்மூடி தியானத்தில் இருப்பார் என நினைக்கிறீரா! இல்லை...இல்லை...ஊர் எல்லையில் ஒரு இறைச்சிக்கடை இருக்கிறது. அந்தக்கடையின் உரிமையாளர் வீட்டில் போய் பிச்சை கேட்பது போல் நடியும், தவம் பற்றி இன்னும் தெரிந்து கொள்வீர், என்றாள். அவளிடம் பிச்சை வாங்கி அருந்திவிட்டு, அவர் ஆச்சரியத்துடன் இறைச்சி வியாபாரி வீட்டுக்குச் சென்றார். அதே அதிகாரத்தோரணையுடன், பிச்சை போடு எனக்கூவினார். வியாபாரி வெளியே வந்தான்.
ஐயா, கொக்கை எரித்த கொங்கணரே! வாசுகி அம்மையார் உம்மை அனுப்பினாரா? சத்தம் போடாதீரும். உள்ளே என் வயோதிகப் பெற்றோர் நோயின் கடுமையால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களது கை, கால்களை அமுக்கிவிட்டு, விசிறி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உமக்கு  தெரியாதா? பெற்றவர்களுக்கு சேவை செய்வதே ஒரு மகனின் முக்கிய கடமையென்று. ஆணாகப் பிறந்த ஒருவன், தன்னைப் பெற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் இறைவனை அடைந்து விடலாம். அதை விட உயர்ந்த தவம் ஏது? என்று அவன் சொன்னதும், கொங்கணருக்கு சுரீர் என முதுகெலும்பில் உறைத்தது போல் இருந்தது. ஆஹா! இவனுக்கு எப்படி நம்மைத் தெரிந்தது? வாசுகி வீட்டுக்குப் போய் வந்ததை இவன் எப்படி அறிந்தான்? என சிந்தித்தவர், உன் பெயர் என்ன? என்றார். தர்மவியாதன் என்று பதிலளித் தான் அவன். தர்மா! என்னை எப்படி உனக்குத்தெரியும்? என்றார்.ஐயனே! என்னைப் பெற்றவர்களுக்கு சேவை செய்வதையே உயரிய தவமாக நினைக்கிறேன். அந்த தவப்பலனால், முக்காலமும் உணரும் சக்தி எனக்கு இயற்கையாகவே வந்திருக்க வேண்டும் எனக்கருதுகிறேன். அதனாலேயே உம்மை எளிதில் அடையாளம் காண முடிந்தது, என்றான்.ஹா...ஒவ்வொரு மனிதனும் அவனவன் கடமையைச் செய்வதே தவத்திற்கு சமமானது, இதைப்புரிய இவ்வளவு நாளாகி இருக்கிறதே! என்றவர், தனக்கு நேர்ந்த அனுபவங்கள் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில், அவற்றை நூல்களாக எழுதி வைத்தார். பின்னர் அவர் ஏழுமலையான் குடியிருக்கும் திருப்பதிக்குச் சென்றார். அங்கே வலவேந்திரன் என்ற மன்னன் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு தவம் என்றால் கடமை என்பது பற்றி விளக்கினார். இது அவனுக்குப் பிடித்துப் போகவே, அவரது சீடன் ஆனான். அங்கேயே சிலகாலம் தங்கியிருந்து பல நூல்களையும் எழுதிய அவர் திருவேங்கடமலையிலேயே சமாதியானார்.

Sunday, December 19, 2010

முப்பீஜமந்த்ரமான த்ர்யக்ஷரிக்கும், ஸ்ரீ பாலாதேவிக்குமுள்ள
அபேதம் கூறப்படுகின்றது:-


1.ஐந்தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்
       உந்தனித யத்திலுயர
   இந்திரவில் சிந்துமொளி இதகிலீங் காரமென
       இருபுருவ நடுவில்வளர
   சந்திரனின் பாலொளிச் சௌமியத் தண்சுடர்
       சுந்தரிநின் சிரசில்விரிய
   வந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு
       வாலைதிரி புரையழகியே!


ஐந்தரி – அழகுற்றவள், முந்துரவி – உதயசூரியன்; இந்திரவில் – வானவில்; சௌமிய – சாந்தமான.
ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியின் மந்த்ர மஹிமை இம்முதற்பாவில் விளக்கப்பட்டுள்ளது. உதய சூரியனின் சிவந்த காந்தியோடு அநாஹத பத்மம் எனும் ஹ்ருதயத்தில் “ ஐம் ” என்ற ஒலி வடிவத்தோடும், நெற்றி நடுவில் இரண்டு புருவங்களுக்குமிடையில் ஆஜ்ஞா சக்ரத்தில் பல வண்ணங்களோடு தோன்றும் வான வில்லின் ஒளியோடு “ க்லீம் ” என்ற ஒலி வடிவத்தோடும், த்வாதசாந்த பத்மம் என்கின்ற சிரஸின் உச்சியில் சந்திரிகையின் வெண்மையான தேஜஸை பரவச்செய்யும் “ ஸௌ” என்ற ஒலி வடிவத்தோடும் கூடிய த்ர்யக்ஷரி மந்த்ரமாகும் மூன்று பீஜங்களின் வடிவாக விளங்குகின்ற ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரி தேவியே நீ அருள் புரிவாயாக.
கோடி சூரியனின் அருணப் பிரகாசத்தோடு மூலாதாரம் முதல் அநாஹதம் வரையில் வாக்பவ பீஜமாகின்ற முதல் பீஜமும், அநாஹதம் முதல் ஆஜ்ஞை வரையில் வானவில்லையொத்த பல வர்ணங்களோடு கூடிய காமராஜ பீஜமாகின்ற இரண்டாவது பீஜமும், ஆஜ்ஞையிலிருந்து ஸஹஸ்ராரம் வரையில் பூர்ணசந்திரனின் வெண்காந்தியோடு கூடிய சக்தி பீஜமாகின்ற மூன்றாவது பீஜமும் வ்யாபித்து விளங்குகிறது என்பதும் இப்பாவின் கருத்தாகும்.]
****
அஷ்டகோண யந்த்ரத்தின் மத்தியில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாதேவியிடம்
வரமருள விண்ணப்பம்:-
2.அட்டவிதழ்முளரியுள் எண்கோணவலயமிடை
       ஆதிபரைகோணமொன்றின்
   நட்டநடுவேஞான நிட்டையொடுவளர்யோக
       நங்கைசிவ மங்கைபரையே
   மட்டவிழ்க்கந்தமிகு மரவிந்தமலரிலமர்
       மங்கலை சிவானந்தியே
   இட்டமுடன்வரமருள் சிட்டருக்கெளியதிரு
       வாலைதிரி புரையழகியே!
அட்டவிதழ் முளரி – எட்டு இதழ்கள் உள்ள தாமரை; எண்கோண வலயம் – அஷ்டகோண சக்கரம்; ஆதிபரைகோணம் – ஒற்றைக் கோணம் கீழ் நோக்கியுள்ள சக்தி முக்கோணம்; யோக நங்கை – யோகினி; மட்டு – தேன்; அவிழ் – சிந்துகின்ற; கந்தமிகு – மணமுற்ற, இட்டமுடன் – விருப்பமுடன், சிட்டருக்கெளிய – அடியார்களால் எளிதில் அடையப்பெறும்.
இப்பாவில் ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரியின் யந்த்ரம் கூறப்பட்டிருப்பதோடு, அடியார்களால் எளிதில் அடையப்பெறும் பாலாதேவி நாட்டமோடு அருள் பாலிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்டிருக்கின்றது.
****
சோணகமலாசனையான ஸ்ரீ பாலாதேவியின் வர்ணனை:-

 3.மேனியிற்செவ்வாடை வேணியிலிளந்திங்கள்
       பானுவின்செக்கர்வண்ணம்
   மோனநகையுலவுசம் மோகனமுகத்திலகு
       ஞானநயனங்கள்மூன்றும்
   பாணிநான்கில்அக்க மாலைஏடும்அபய
       தானகுறிகளுமணிந்த
   சோணகமலாசனையை பேணினேன்மனதில்திரு
       வாலைதிரிபுரையழகியே!

பாணி – கரம்; அக்கமாலை – ஸ்படிகாக்ஷமாலை; குறி – முத்திரை; சோணகமலாசனை – செந்தாமரையில் வீற்றிருப்பவள்.
சிவந்த ஆடையை அணிந்து, பிறைச்சந்திரனை முடியிற்சூடி, உதிக்கின்ற சூரியனின் அருணகிரணத்தை வீசுகின்ற உடலழகோடு மூன்றுகண்களும், ஸ்படிகமாலை, புஸ்தகம், அபய, வர முத்திரைகளைத்தரித்த நான்கு கைகளோடும்கூடி செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியை த்யானிக்கின்றேன்.

ஆதி அந்தமிலா ஜ்யோதிர்மயியும், அருணப்ரபை வீசுகின்ற
சிவயோகினியுமான ஸ்ரீ பாலாம்பிகை:-

4.நூதனைநலந்தருச னாதனிபுரந்தரைநி
       ராமயிபுராரிமெய்யின்
   பாதிபரசாம்பவிப வானிசிவயோகினிவி
       நோதினிநிதாந்தகலிகை
   சோதிமயிசெங்கதிர்க் கோதைபரதேவியாம்
       ஆதியந்தமிலிவிமலை
   தீதறுபராபரை வேதமாமுதல்விதிரு
       வாலைதிரிபுரையழகியே!

நூதனி – என்றும் புதியதானவள்: புரந்தரை – கங்கை; நிராமயி – வாதனைகளற்றவள்; புராரி – சிவபெருமான்; நிதாந்தகலிகை – மேன்மையான இளம்பூவரும்பு போன்ற குமரிப்பெண்; செங்கதிர்க்கோதை – அருணப்ப்ரகாசம் வீசும் பாலிகை; ஆதியந்தமிலி – முதலும், முடிவுமற்றவள்.

பாலையை வணங்குபவர்கட்கு அஷ்டமா சித்திகளும்
எளிதாகக் கைகூடுவது:-

5.மூலபதுமத்திலொரு முகமாய்மனம்கட்டி
       முழுசிரத்தையொடுநின்னை
   சீலமாய்ப்பாவிக்கும் யோகசாதகருக்கு
       சிரசரோசத்தினின்று
   கோலநின்மலசுகா தீதபியூடமழை
       கொட்ட, வாய்க்காதுபோமோ
   சாலசித்திகளெட்டும்? சாலீனையானதிரு
       வாலைதிரிபுரையழகியே

மூலபதுமம் – மூலாதாரம்; சீலமாய் – நல்லொழுக்கத்தோடு; சிரசரோசம் – ஸஹஸ்ரார கமலம்; நின்மலசுகாதீத பியூடமழை – குறையிலா பேரின்ப அமுதமழை;
சாலீனை – நாணம் மிகுந்த குமரிப்பெண்.
மூலாதாரத்தில் வாசியையடக்கி ஏகாக்ரமான பாவனையுடன் ஸ்ரீபாலாம்பிகையான உன்னை நல்லொழுக்கம் கைவிடாமல் முழுசிரத்தையோடு த்யானம் செய்கின்ற யோகசாதகர்களுக்குக் குண்டலியின் ஏற்றத்தினால் ஸஹஸ்ரார சக்ரத்திலிருந்து குறையற்ற பேரின்பமயமான அம்ருதமழை கொட்டும்போது எங்ஙனம் அஷ்டமாசித்திகளும் கிடைக்கப்பெறாமல் போகும்?

மும்மூன்றாக உள்ளவை அனைத்தும் மூவெழுத்து மந்திரத்தின்
பரிணாமமே என்பது:-
6.முப்பாதமுற்றகா யத்திரியுமுத்தீயும்
       முத்தேவர்முச்சக்தியும்
   தப்பாதமூன்றுபுரு டார்த்தமும்வருணமும்
       முக்காலமுந்நாடியும்
   முப்பாருமுக்குணமுமூவேதமுச்சுரமும்
       மும்மூன்றெனானவையெலாம்
   முப்புரைஅநாதீத தற்பரையுன்வடிவுதிரு
       வாலைதிரிபுரையழகியே!

முப்பாதமுற்ற காயத்திரி – மூன்று வரிகளைக்கொண்ட காயத்ரி மந்த்ரம்
முத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்ற மூன்றுவகை அக்நிகள்.
முத்தேவர் – ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரர்.
முச்சக்தி – இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி.
மூன்று புருடார்த்தங்கள் – அறம், பொருள், இன்பம்.
வருணங்கள் – ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்கள்.
முந்நாடி – இடை, பிங்களை, சுழுமுனை.
முப்பார் – பூமி, ஸ்வர்கம், பாதாளம்.
முக்குணம் – ஸத்வம், ரஜஸ், தமஸ்.
முச்சுரம் – ஓங்காரத்தின் வடிவங்களான அகாரம், உகாரம், மகாரம்.
இவ்வுலகில் எவையெல்லாம் மும்மூன்றாகத் தோற்றமளிக்கின்றனவோ, அவையெல்லாம் அம்பிகையின் ‘த்ரிபுரை’ என்ற பெயரை அனுசரித்தே விளங்குகின்றன எனும் கருத்தே இப்பாவில் அமைந்திருப்பது.

தேவாதிகள் போற்றும் அன்னை தேகாதிகட்குற்ற துன்பங்களை
நீக்கவேண்டும் என்று வேண்டுகோள்:-

7.ஓராதசித்தியொடு மூவாததேசுற்ற
       யோகாதிவீரர்குழுவும்
   தேவாதிகளும்முனிவர் ஏகாந்ததவசிகளும்
       தேடியுனையேத்திமகிழ்வார்
   தேகாதிகட்குற்ற தீராதவாதனைகள்
       தானாயுடைந்துபொடிய
   வைகாதெனைக்காக்க வருவாய்கனிந்துதிரு
       வாலைதிரிபுரையழகியே!
யோகாப்பியாசத்தால் எண்ணற்ற சித்திகளைப்பெற்று மூப்பு, நரை இல்லாத பொலிவுற்ற சித்தர்குழாமும், தேவாதி பதினெண்கணங்களும், முனிவர்களும், ஏகாந்தமான நிட்டையில் ஈடுபட்டுள்ள குருமார்களும் உனைத்தேடியடைந்து துதித்து மகிழ்கின்றனர். உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆத்மாவிற்கும் ஏற்படக்கூடிய தீராத வாதனைகளும் தானாகவே அழிந்து விலகிப்போகும்வண்ணம், சற்றும் தாமதம்செய்யாது எனைக்காக்க மனம் கனிந்து வருவாயாக.

அம்பிகையை த்யானிப்பது ஸர்வமங்களங்களையும் அருளும் என்பது:-
8.ஆயிநின்மூவெழுத் தாதிமந்திரமுமுன்
       அருளொளிருமழகுமுகமும்
   தூயநிட்களையுனது துயரறுகடாட்சமும்
       தெளிவொடுன்னுபவர்வாழ்வில்
   நோயறும்வறுமைகெடும் செல்வம்செழிக்குமதி
       ஞானமும்நலமும்வளரும்
   ஓயுமடியோடுகொடு வினைகளும், வாழ்கதிரு
       வாலைதிரிபுரையழகியே!

ஆயி – அன்னை; மூவெழுத்து ஆதிமந்திரம் – த்ர்யக்ஷரி என்ற பாலா மந்த்ரம்; நிட்களை – எங்கும் நிரம்பியிருப்பதால் கூறுபடாதவள்; உன்னுதல் – த்யானித்தல்.




பதினெண்சித்தர்கள் என்ற வரிசையில் சிவவாக்கியரின் பெயர் இடம்பெறவில்லை யெனினும், திருமூலர், சிவவாக்கியர், பட்டினத்தார் எனும் மூவரும் தமிழகத்தின் முப்பெருஞ் சித்தர்களெனப் போற்றப்பட்டு வருகின்றனர்.  இவர் இயற்றிய நூலுக்கு “சிவவாக்கியம்” என இவரே முதற் காப்புச் செய்யுளில் பெயரிட்டிருக்கின்றார்.  அதனால் நூலின் பெயரைக் கொண்டு இவருக்கு சிவவாக்கியர் எனும் பெயர் ஏற்பட்டு வழங்கி வருகின்றது. (அவருடைய பாடல் தொகுப்பில் “சிவாயம்” என்ற சொல் அறுபதுக்கும் மேலான இடங்களில் வந்திருப்பதனால் அநேகமாக  அவர் இப்பெயரை அடைந்திருக்கலாம் எனக் கருதுவோரும் உண்டு.) பெரிய ஞானக்கோவைக் கணக்குப்படி தத்துவ சித்தாந்தக் கோட்பாடுகளை உட்கொண்ட 550 பாக்களாலான நூல் சிவவாக்கியம். அபிதான சிந்தாமணி எனும் நூலில் காணப்படும் ஒரு கதைக்குறிப்பைத் தவிர இந்நூலின் ஆசிரியரான சிவவாக்கியரைப்பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. 
சிவவாக்கியர் வேதியர் குலத்திற் பிறந்தவரென்றும், காசிக்குச் சென்ற இவரிடம் செருப்புத் தைப்பது தொழிலான ஒரு சித்தர் கொஞ்சம் மணலும், ஒரு பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து, “எந்தப்பெண் இந்தச் சுரைக்காயையும், மணலையும் சமைத்துப் பரிமாறுகின்றாளோ அவளே உமக்கு மனைவி” என்று கூறியதாகவும், அவ்வாறே சமைத்து உணவிட்ட ஒரு குறப்பெண்ணை இவர் மணந்து இல்லறத்தில் ஈடுபட்டார் எனவும், ஒரு சமயம் மூங்கில் வெட்டும்போது அது பொன் பொழிய அதை ஆட்கொல்லி  என வெறுத்து நீத்தார் எனவும், பின்னர் கொங்கண சித்தரின் நட்புடன் ஞானமார்க்கத்தில் திகழ்ந்த சித்தராக விளங்கினார் எனவும் அக்கதை குறிப்பிடுகிறது.
சிவவாக்கியரின் பாடல்களை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது சில பாக்கள் இருமுறை மீண்டும் கூறப்பட்டிருப்பதையும், சிற்சில பாக்களின் சில வரிகள் வேறு பாக்களில் மறுபடியும் வந்திருப்பதையும், சில பாடல்கள் உட்கருத்திலும், நடைநயத்திலும் மற்ற பாடல்களிலிருந்து மாறுபட்டிருப்பதையும் காணலாம். இக்காரணங்களால் சிவவாக்கியத்தின் சில பாடல்கள் இடைச்செருகல்களே என உறுதியாகக் கூறலாம்.
சிவவாக்கியர் பாடல்களின் சிறப்பு அம்சம் யாதெனின், அவற்றில் பக்தி அல்லது கடவுள்பற்றிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்பதேயாகும். திரு.ஏ.வீ.சுப்ரமணிய ஐயர் அவர்களின் “கவிதையும், தமிழ்ச்சித்தர் தத்துவமும்” (Poetry and the philosophy of the Tamil Siddhars) என்ற நூலில் இவ்வாறு கூறியுள்ளார்: “Sivavakkiyar’s poem is a grand remonstrance almost against everything that was held sacred in his time”.  அதாவது, “அவரது காலத்தில் புனிதத்தன்மைவாய்ந்தவை எனக் கருதப்பட்டுவந்த ஏறத்தாழ அனைத்தையுமே சிவாவாக்கியர் பாடல்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றன”.  இருப்பினும் அவர் ஒரு நாத்திகரோ, லோகாயதவாதியோ அல்லர். மெய்ந்நெறியில் ஆர்வமும், தெய்வ சிந்தனயும் கொண்ட புரட்சியாளரும், சமய ஒருமைப்பாட்டின் ஆதரவாளரும் ஆவார் அவர். சூது தெரியாத, கலப்படமற்ற உளந்திறந்த அறிவுரையையே சிவவாக்கியம் அளித்துள்ளது. தனது “தமிழ் இலக்கிய வரலாறு” (History of Tamil Literature) எனும் நூலில் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இப்பாடல்களை, “ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையால்  சிலசமயங்களில் நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் ஆற்றல்வாய்ந்த தெளிவுபடைத்தவை” என்கின்றார். “ஆபாசமானவை என்றும், நயமற்ற வக்கிரமானவை என்றும் விடாப்பிடியான ஒழுக்கக் கொள்கையுடையவர்கள் அழைக்கக்கூடிய சொற்றொடர்களை வரையாது பயன்படுத்துவதில் சிவவாக்கியர் சற்றும் தயக்கம் காட்டவில்லை”.  மனிதரின் நிலையற்ற காமவேட்கையையும், மனிதப்பிறப்பின் உயிரியல் ரீதியான உண்மைகளையும் ஏளனத்தொனியில் அவரது பாடல்களில் இடையறாது சுட்டிக்காட்டியிருப்பதே சிவவாக்கியருக்கு நேரான ஆபாசக்குற்றச்சாட்டிற்குரிய காரணமாகும்.
சடங்குவெறிகொள்வதன்று சமயம்:
சிவவாக்கியம் சைவசமயத்தில் விளந்ததுமட்டுமன்று, அச்சமயத்தின், முக்கியமாக அதனுடைய ஆசாரக்கோட்பாட்டில் உறுதியாக இருக்கின்ற, சடங்கு வினைகளால் செறிவு குன்றிய அமைப்புமுறைகளின் எதிர்க் கிளர்ச்சியாக எழுந்ததுமாகும்.  எல்லாச் சித்தர்களையும்போல சிவவாக்கியரும் ஒரு சுதந்திரச் சிந்தனையாளரும், சமயம், மறைநூல்கள், ஆசாரச் சடங்குகள், முதலானவற்றால் ஈர்க்கப்படாத புரட்சியாளரும் ஆவார்.  சிவவாக்கியரைப் பொறுத்தவரையில் சமயம் என்பது ஒரு விதிகளின் தொகுப்போ, நம்பிக்கைக் கோட்பாடோ அன்று.  பரம்பொருளான இறைவனைப்பற்றிய நுண்ணறிவுத்திறமும், ஆழ்ந்த தொடர்புமாகும் அது.
“ஒன்றும் ஒன்றும் ஒன்றலோ உலகனைத்தும் ஒன்றுமே
அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே”
என உலகம் அனைத்தும் ஒன்று என்றும், அன்றும் இன்றும் அனாதியானவன் இறைவன் ஒருவனே என்றும் பறைசாற்றுகிறார் சிவவாக்கியர்.
அதுமட்டுமன்று. எங்கும் நிறைந்த, எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்திருக்கும் சிவபெருமானை உள்ளும் புறமுமாக உணர்வுபூர்வமாக அறிபவனே ஞானியாவான்;
“பாரடங்க வுள்ளதும் பரந்தவானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண்சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்துள்ளும் புறத்துள்ளும்
சீரிடங்கள் கண்டவர் சிவன் தெரிந்த ஞானியே”
எனவும் வரையறுத்துக் கூறுகின்றார்.
சிவவாக்கியர் கருத்துப்படி,
“அண்டர்கோனிருப்பிடம் அறிந்துணர்ந்த ஞானிகள்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே”
அதாவது, ஞானியான ஒருமனிதன் கோயிலிற்சென்று கைகூப்பி வேண்டுதல் செய்து இறைவழிபாடு நடத்துவதில்லை.
எங்கும் நிறைந்த இறைவன் உமக்குள்ளேயே இருக்கும்போது அவ்விறைவனை அந்தர்முகமாக உன்னி வணங்குவீராயின், அச்சுருக்கமற்ற சோதிவடிவினனான இறைவனை அடையலாம். அவ்வாறிருக்க,

நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே
விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங் கேளுமின்
என்று கூறி,
நெருப்புநீரு மும்முளே நினைத்துகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே
என்று சரியானமுறையையும் புகட்டுகின்றார்.

ஆனால், அந்தர்முகமாகச் செய்யப்படுகின்ற வெறுமையான தியானமுறைகளும் பலன்தரப் போவதில்லை. கையில் உருத்திராட்ச மாலையை வைத்து உருட்டிக்கொண்டு, கண்ணையும் சிமிட்டிக்கொண்டிருப்பினும், மனம்போவது எவ்விடம்! மனதிற்கிடக்கும் பொய், வஞ்சனை முதலானவற்றைத் துடைத்தெறியாமல் மெய்ப்பொருளை மனதின்கண் காணவும் இயலாது என்பதனை,
கைவடங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீ ரெண்ணியெண்ணி பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையை பொருந்திநோக்க வல்லிரேல்
மெய்கடிந்த தும்முளே விரைந்துகூற லாகுமே
எனச் சுட்டிக்காட்டுகிறார்.

நல்லெண்ணத்துடன் செய்வதாயினும் கூட சிற்சில கிரியைகள் அதைச் செய்பவன் மனதிற்கு ‘நானே அதைச்செய்தேன்’ என்ற போலியான நிறைவு தருமேயல்லாமல் வேறெந்த பலனையும் கொடா என்பதனை,
பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே
எனச் செய்த பூசையைக் கொண்ட பொருள் யாதென விளக்கித் தருமாறு கேட்கின்றார்.
சமைத்த கறியின் சுவையை அக்கறியைச் சமைத்த சட்டியும், கிளறும் சட்டுவமும் தெரிந்துகொள்ளாது.  பரம்பொருள் மனத்தின்கண்ணேயே இருக்க சிற்பியினால் உருவாக்கப்பட்ட கற்சிலை நிட்கள, நின்மல பர-வத்துவான பொருளாகாது என்பதனை உணர்த்த,
நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சார்த்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திர மேதடா?
என்று கேட்கிறார்.
பேதமை நிறைந்த மக்கள் அனைவரும்கூடி விழாமுதலான பேரில் செப்புச் சிலையை வைத்துச் செய்யும் பித்தலாட்டங்களையும் கடுமையாகச் சாடுகிறார் சிவவாக்கியர்.
ஊரிலுள்ள மனிதர்கா ளொருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலு மறியொணாத வாதிசித்த நாதரை
பேதையான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே.
எனத் தேர்த்திருவிழா போன்ற வெறும் சமய சம்பிரதாயங்களை ஏளனம் செய்கின்றார்.

மூடநம்பிக்கைகளில் உழலும் உலகத்தவர் தங்களுக்கு ஏதாவதொரு நோய் வந்தால் கொல்லா விரதத்தை எள்ளளவும் கொண்டாடாமல், ஆடு, கோழி முதலியவற்றைப் பலி கொடுக்கும் ஈனச்செயல்களைத் தவிர்க்குமாறு எச்சரிக்கிறார் சிவவாக்கியர். ‘அத்தகைய பாபச்செயல்களைச் செய்யத்தூண்டும் உங்களது குலதெய்வங்கள் உங்களைக் குணமாக்கப்போவதும் இல்லை. உடல்நலம் மேலும் குன்றி மூஞ்சூறு போல இளைத்துப் போவீர்களேயன்றித், தேறும் நிலை உண்டாகாது.’
தங்கள்தேகம் நோய்பெறின் தனைப்பிடாரி கோயிலிற்
பொங்கல்வைத்தும் ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளுந்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே.
என்று அழுத்தமாகச் சொல்கின்றார்.
ஐம்புலன்களையும் வெல்லாது அவற்றின் வழியே செல்லும் அஞ்ஞானிகளுக்கு அன்னதானம் முதலான தருமங்கள் செய்வதும் வீணே. அத்தகைய போலித் துறவிகளுக்கு ஈகைசெய்வது தீமையையே விளைவிக்கும்.
ஐம்புலனை வென்றிடா தவத்தமே யுழன்றிடும்
வம்பருக்கு மீவதுங் கொடுப்பதும்ம வத்தமே
என்பதே சிவவாக்கியரின் அறிவுரை. 
நல்ல இடங்களைத் தேடி அவற்றைச் சுத்திசெய்து பீடமிட்டு, அதன் மீது திருநீறு பூசி அமர்ந்து அருமையாகத் தவங்கள் செய்வார்கள்.  ஆனால், ஆன்மவடிவினனான இறைவன் ஒடுங்குமிடமும் உதிக்குமிடமும் யாதென்று அறிந்து பின் தவம் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகின்றார் சிவவாக்கியர்.
இடங்கள்பண்ணி சுத்திசெய்தே யிட்டபீட மீதிலே
அடங்கநீரும் பூசல்செய் தருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனா ருதிக்குஞான மெவ்விடம்
அடங்குகின்ற தெவ்விடம் அறிந்துபூசை செய்யுமே.
அதுமட்டுமல்ல,
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியேக தறியே கண்கள்மூடி என்பயன்
என்றும்,
தேடிவைத்த செம்பெலாந் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசையென்ன பூசையோ
என்றும்,
மெய்ப்பொருளாகும் இறைவனை உள்நோக்கியுணர வேண்டுமேயன்றி வெளிப்புறமான மரபுவழிச் சடங்கு வழிபாடுகளாலும், ஆசாரங்களை மேற்கொள்ளுதலாலும் எந்தப் பயனும் இல்லை என்று மனதில் பதியும்படிப் பல பாடல்களில் ஆவேசமாகக் கண்டனம் செய்கின்றார் சிவவாக்கியர்.
ஒன்றே தெய்வம்:
தமிழ்ச்சித்தர்கள் கடைப்பிடித்த மெய்யுணர்வு நெறிமுறையில் தனிப்பட்ட தெய்வங்களுக்கு இடமில்லை. இறைவனைப்பற்றிய ஆத்திகக் கோட்பாடு தவறான இரண்டு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. தனிப்பட்ட தெய்வம் என்ற கருத்து ஒன்று; படைத்தவனான இறைவன் படைப்புக்களிலிருந்து நிரந்தரமாக வேறுபட்டிருப்பவன் என்பது மற்றொன்று.  சிவவாக்கியரின் பார்வையில் எனக்கென்றொரு தனிக்கடவுள், உனக்கென்றொரு தனிக்கடவுள் என்று இருக்கமுடியாது.  ஏனெனில் அதனால் இரண்டு கடவுளர் உருவாவர்.
எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ
அங்குமிங்கு மாகிநின்ற வாதிமூர்த்தி யொன்றலோ
அங்குமிங்கு மாகிநின்ற வாதிமூர்த்தி யொன்றெனில்
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.
என இடித்துரைக்கின்றார் சிவவாக்கியர்.
இரண்டற விளங்கும் இறைவனை விட்டுணு எனவும் சிவன் எனவும் பாகுபடுத்தி வணங்குவது மடமை. பொன்னாற் செய்யப்படுகின்ற நகைகள் பல வடிவம் கொண்டவையாயிருப்பினும் ஆதாரமாயிருப்பது பொன் ஒன்றே.
தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே
மற்றும்,
எங்கள்தெய்வ முங்கள்தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள்பேத மன்றியே வுண்மைரெண்டு மில்லையே
என்று, கடவுளைப் கூறுபோட்டுக்கொள்வது மனிதர்களிடமுள்ள பேதமையாலும், பேதவுணர்வாலுமே என்பதனையும் வலியுறுத்துகிறார்.
அரியுமாகி யயனுமாகி அண்டமெங்கு மொன்றதாய்
பெரியதாகி யுலகுதன்னில் நின்றபாத மொன்றலோ
விரிவதென்று வேறுசெய்து வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாருமிங்கு மங்குமெங்கு மொன்றதே
எனவும் கூறி, ஒன்றே இறைவன் எனும் உண்மையை வலியுறுத்துகின்றார்.
உடலே இறையுறையும் கோயில்:
சித்தர் மரபில் மனிதவுடல் என்பது பேரண்டத்தின் குறுவடிவமாகக் கொள்ளப்படுகின்றது. உடலை ஒப்புக்கொள்கின்றவன் உலகையே ஒப்புக் கொண்டவனாகின்றான் என்பதே சித்தர்களின் நிலைபாடு.  உருவிலங்குமேனி எனும் புலன்களால் உணரத்தக்க மனித உடலின் தன்மை காலத்தால் அழிவதும், திருவிலங்குமேனி எனும் அகவுணர்வால் உணரத்தக்க உடல் அழியாமற் பாதுகாக்கப்பட வல்லதுமாகும் என்பது சிவவாக்கியர் கொள்கை.
உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றநீர்
திருவிலங்கு மேனியாகச் சென்றுகூட லாகுமே
என்று அவர் உறுதியளிக்கின்றார்.

சிவவாக்கியத்தின் ஆறாவது பாடல் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவ னத்தினால்
விடுவனோவ வனையின்னம் வெட்டவேணு மென்பனே
நடுவன்வந் தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டுங் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பரே
இதன் பொருளாவது, யாக்கையே இறைவனை அறியவல்ல கருவியாக இருக்கும்போது, அதனைப் பேணாது புறக்கணித்து முடிவில் மரணமடைந்து சுடலையில் எரிபடக்கொடுக்கின்றனர். அடுத்ததாக சிவவாக்கியர் சொல்லணிமிக்க ஒரு கேள்வியைக் கேட்கின்றார்: இதே மனிதர்கள் அழகிய உடல்வடிவுள்ள பெண்ணைத் தேடிக்கண்டுபிடித்து திருமணம் செய்துகொண்ட பின், அப்பெண்ணை மற்றொருவன் கவர்ந்து கொண்டு போக எண்ணினால் அனுமதிப்பார்களா?  ஆகவே மாந்தர் தங்கள் இல்லப் பெண்களைக் காப்பது போல யோகமுறைகளால் தத்தம் உடல்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என மக்களுக்கு உணர்த்துகிறார்.   
சருகருந்தி நீர்குடித்து சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தில் தேகங்குன்றி சஞ்சலமுண் டாகுமே
என உதிர்ந்த இலைச்சருகுகளை மட்டும் தின்று, தண்ணீரையும் குடித்து மலைச்சாரல்களில் வாழும் தவசிகளிடமும் அவர் உடலைப் பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
இவ்வாறு, மனிதவுடலுக்கான முக்கியத்துவத்தையும், அதன் உள்ளார்ந்த பயனையும் சுட்டிக்காட்டுகின்றார் சிவவாக்கியர்.  உடலாகின்ற கோவிலில் இறைவனைக் காணலாம் என உறுதியாக நம்பிக்கையூட்டுகிறார் அவர்.  ஆனால், ஞானம் கொண்டு நல்லெண்ணத்துடன் வணங்கவேண்டியது அவசியம்.
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலா மிறையையே.
அதுமட்டுமன்று, எவ்வாறு குடமானது நீரில் அமிழ்த்தப்படும்போது வெள்ளத்தால் நிரம்பப் படுகின்றதோ, அவ்வாறே எங்கும் இறைமயமாக இருக்கின்ற இவ்வெளியிலுள்ள இவ்வுடலும் சிவத்தால் நிறைந்திருக்கின்றது என்பதனை,
அக்குடஞ் சலத்தைமொண் டமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடஞ் சிவத்தைமொண் டுகந்தமர்ந் திருப்பதே
என்று விளங்கக் கூறுகின்றார்.
மனிதவுடலுருவால் ஆன அரங்கமே இறைவனின் திருவரங்கம் என்ற உண்மையறியாது உழலும் மாந்தர்களைக்கண்டு அவர் வருந்துகிறார்.
உருவரங்க மாகிநின்ற வுண்மையொன்றை யோர்க்கிலீர்
கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்துபின்
திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே.
இங்ஙனம் இறைவனை மெய்யுள் காணும் பயிற்சி நாடாமல் வெளியேதேடி அலையும் மக்களை நோக்கி,
தூரந்தூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய்ப் பரந்த அப் பராபரம்
ஊருநாடு காடுமோடி யுழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே
எனவும்,
காடுநாடு வீடுவிண் கலந்துநின்ற கள்வனை
நாடியோடி யும்முளே நயந்துணர்ந்து பாருமே
எனவும் கடிகிறார்.
அதுமட்டுமன்று,
உறியிலே தயிரிருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்
அறிவிலாத மாந்தரோ டணுகுமாற தெங்ஙனே
என்றும் வருந்துகிறார் சிவவாக்கியர்.
சிவவாக்கியர் மனிதவுடலைத் தனிமுதலான மெய்ப்பொருளை அடைவதற்கான புனித வழியின் வாயிற்படியாக அடையாளம் காட்டுகிறார்.  புண்ணிய நதிகளெனவும், கோயில்களெனவும், மலைகளெனவும் அநேகவாசல்களைத் தேடிப்போவானேன். ஏழையான மனிதனுக்குகந்த புனிதவாசல் உடலான இவ்வாசலே.
அண்டவாச லாயிரம்ப்ர சண்டவாச லாயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாச லாயிரம்
இந்தவாச லேழைவாச லேகபோக மானவாசல்
எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே.
என்று அவர் பாடுகிறார்.
அகநிலையனுபூதி:
இறைவனான சிவபெருமானுடன் ஒத்து வேறுபடாநிலையை உணர்தலே தமிழ்ச்சித்தமரபில் அகவறிவு அல்லது ஆன்ம அனுபூதி எனப்படுவது. தன்னையறிதல் தன்னுளேயிருக்கும் இறைவனையும் அறியும் வழியாகின்றது.  ஆனால் சிவவாக்கியர் ஒருபடி மேலே போகின்றார்.  மெய்ஞ்ஞானம் பெற்று இறைவனையுணர்ந்த நிலையில் தனக்குள்ளே தானன்றி மற்றொன்றையும் கண்டிலேன் என்று வியக்கின்றார்.
என்னகத்து ளென்னைநா னெங்கும்நாடி யோடினேன்
என்னகத்து ளென்னைநா னறிந்திலாத தன்மையால்
என்னகத்து ளென்னைநா னறிந்துமே தெரிந்தபின்
என்னகத்து ளென்னையன்றி யாதுமொன்று மில்லையே
அதுமட்டுமன்று, காண அரிதான அந்த மெய்ப்பொருளை முயன்று காணும்போது மட்டுமே அது அறிவில் விளங்கும்.  “நோக்கொணாத அந்த நோக்கு” கைவரப்பெறின் எல்லாவிடத்திலும் மெய்ப்பொருளாம் இறைவனைக் காண்பதும் எளிதாகி விடும் என்ற பொருள்பட,
“நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கையெங்க ணோக்குமே”
என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
சுத்தமெய்ஞ்ஞானமே யோகநிலையின் உன்னதமான குறிக்கோளாகும். சிவவாக்கியர் இந்நிலையை, “seedless consciousness” என்று ஆங்கிலத்தில் கூறப்படுகின்ற, வித்தானது இற்றுப்போய் அதிலுண்டான வித்துப்போன்ற அவத்தையென்கிறார். கட்டற்ற அந்நிலையில் சித்தமும், சிந்தையும், சீவனும், மோட்சமும், மூலமந்திரங்களும் நீக்கம்பெற்று விடுகின்றன என்பதை,

சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தையிற்று ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே
என்று நவில்கின்றார்.
செத்தபின் முக்தி என்ற கருத்தில் சிவவாக்கியருக்கு ஒப்புதலில்லை. அத்தகைய விடுதலை வெறும் ஒரு அனுமானம் மட்டுமே. மறுபிறவியை மறுக்கும் சிவவாக்கியரின் புகழ்பெற்ற பாடலொன்று உண்டு. அறியவிருப்பவனின் மரணம் அவன் அறிவதைத் தடைசெய்யும் என்றும், அதனால் மரணத்திற்குப் பின் முக்தி என்பது சாத்தியமன்று என்பதற்கும் உள்ள சான்றாகும் அப்பாடல்.

கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணைய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை யுயிர்களும் முடற்புகா
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே.
என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார் சிவவாக்கியர்.

ஓடம்போலோடுகின்ற உடல் கவிழுமுன்னே யோகஞ்செய்து தேகத்தை நிலைநிறுத்திச் மெய்ப்பொருளையறிய வேண்டும் என்பதை,
ஓடமுள்ள போதெலா மோடியே யுலாவலாம்
ஓடமுள்ள போதெலா முறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடமு முடைந்தபோது வொப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே
என்று, இறந்துபட்ட பிறகு சூனியமென்ற இடத்தில் யாவருள்ளனர் என்ற கேள்வியை அவர் எழுப்புகின்றார்.
மறைநூல்களின் பயனின்மை:
ஆன்மமுத்தி அல்லது சிவப்பேறு என்பது ஜாதி, குலம், பதவி, வயது எனும் பேதங்களற, மனிதராகப் பிறந்தவர் அனைவருக்குமுள்ள பிறப்புரிமையாகும். சிவவாக்கியரின் கணக்குப்படி நமதுவாழ்வில் காணப்படுகின்ற மருட்சிக்குக் காரணம் சமூக அமைப்புகளேயன்றி தனிமனிதனின் இயல்பன்று.  ஆகவே சில சமய சமூக அமைப்புக்களையும், ஒழுங்குகளையும், சிவவாக்கியர் மிகத்தீவிரமாகத் தாக்குகின்றார்.  சமயக்கோட்பாடுகளில் உறுதியாகவிருக்கின்ற சிந்தனையாளர்கள் இதனை ஏற்புடைய வழிமரபிற்கு எதிராக எழுந்த கிளர்ச்சி இயக்கமென பொருள்கொடுத்து வந்துள்ளனர். சமய மறைநூல்களுக்கும் இறைமைக் கோட்பாட்டிற்கும் எதிராகவுள்ள அவரது மனப்பான்மையும், அத்துடன் சாதிப்பிரிவினைகள், உருவ வழிபாடு, அர்த்தமற்ற சமய ஆசாரங்கள், சடங்குகள் முதலானவற்றைப் பற்றிய கடுமையான விமரிசனமும், போலிப் போதகர்களையும், பொய்த்துறவிகளையும் பற்றி விடுத்துள்ள எச்சரிக்கைகளும் சமூக-ஒழுங்குநெறிக் கோணத்திலிருந்து (socio-ethical angle) மதிப்பிட வேண்டியவையாகும்.
பகுத்தறிவுச் சிதைவிலிருந்தும், இயல்பற்ற சமுதாயமரபு சார்ந்த சிந்தனைகளிலிருந்தும் மக்களை உலுக்கியெழச்செய்ய பல்வேறான சாத்திரங்களையும், மறைநூல்களையும் சிவவாக்கியர் கடுமையாகச் சாடுகிறார். இறக்குந் தறுவாயில் வேர்வையும், மூச்சுத்திணறலும் வந்து அலட்டும்போது வேதங்கள் பலனளிக்கா.
“வேர்த்திரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ” என்று எள்ளி நகையாடுகிறார்.
அதேவேளையில், ஒரு மாத்திரைப் பொழுதாவது தன்னைத்தானே அறிந்து கொள்ள இயலுமாயின் சாத்திரங்கள் மீதுள்ள அளவற்ற வேட்கை எனும் நோயிலிருந்து விடுபட்டுவிடலாம். சத்தியமான முத்தி சித்திக்கவும் வாய்ப்புண்டு.
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்களேது! சத்திமுத்தி சித்தியே.
எனத் தெளிவுபட உரைக்கிறார்.
மெய்ப்பொருளையறிய இயல்பான, நேரடியான அணுகுமுறையைத் தேடும் ஒருவன் தனது ஆன்மிகப் பயிற்சிக்குச் சாத்திரங்களும், சமயவிதிமுறை நூல்களும் பெரும் இடையூறாக இருப்பதனையறிந்து அவற்றை விலக்கவேண்டும் என்பதே சிவவாக்கியரின் அறிவுரை. பாலுக்குள் நெய் மறைந்திருப்பதைப்போல் “ஆலமுண்ட கண்டனார் அகத்துளே” யிருப்பதை உணராமல்
நாலுவேத மோதுவீர் ஞானபாத மறிகிலீர்
பாலுணெய் கலந்தவாறு பாவிகா ளறிகிலீர்
என்று வருந்துகிறார்.
சூரியனை நேராகப்பார்த்துத் துதிசெய்தால் விளையும் பயன் கண்குருடாகும் என்பதுதான்.  இறையுறையும் பாத்திரமான சித்தத்தினுள் ஒன்றி மோன பக்தியில் ஆழும்போது சிவத்தையுணர்ந்து அனைவரும் சித்தராகலாம். அல்லாது சாத்திரங்களை மட்டும் நம்புவதில் பயனில்லை என்பதனை
சாத்திரங்கள் பார்த்துபார்த்து தான்குருடு ஆவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள்
பாத்திரம் அறிந்துமோன பத்திசெய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவருஞ் சித்தராவி ரங்ஙனே என்று பாடுகிறார்.
மறைநூல்களெனத் தொன்றுதொட்டுப் பாராயணம் செய்யப்பட்டு வரும் நான்கு வேதங்களும், ஆறு சாத்திரங்களும், ஐம்பூதங்களையும், தொண்ணூற்றாறு தத்துவங்களையும் விளக்குகின்ற ஆகமங்களும், மற்றும் சாதிபேதங்களை எடுத்துக்கூறுகின்ற தருமசாத்திர நூல்களும், ஆகிய இவையனைத்துமே பற்பல வேறுபாடுகளுடையவையாகத் தோன்றி, மீண்டும் ஏற்றபடியான, பிழையற்ற முறை இல்லாத காரணத்தால் உழன்றுகொண்டிருக்கின்றன என்பதனை
ஓதும்நாலு வேதமும் உரைத்தசாத்தி ரங்களும்
பூததத்து வங்களும் பொருந்துமாக மங்களும்
சாதிபேத வன்மையுந் தயங்குகின்ற நூல்களும்
பேதபேத மாகியே பிறந்துழன்றி ருந்தவே.
எனத் தன்கருத்தை வெளியிடுகின்றார்.
சொந்தமான அனுபவத்தை விட உயரியவல்ல ஏட்டளவிற் படிக்கின்ற சாத்திரங்கள்.
நூறுகோடி யாகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாளிருந்து மோதினால தென்பயன் என்பதே அவரது கேள்வி.
இறையனுபூதிக்குப் புலன்களையடக்கியுள்ள உள்நோக்கே முக்கியமானது. சாமங்கள் தோறும் நான்கு வேதங்களையும் சந்தச்சிதைவு வராதபடி பாராயணஞ் செய்தாலும், சகல சாத்திரங்களையும் ஐயந்திரிபுற ஆராய்ந்தாலும் பயனில்லை. இறைவனையறியப் புலனடக்கம்செய்து ஒருமுகமாக உள்நோக்கினால் மட்டுமே சிவத்தை உணரமுடியும் என்றும்,  அங்ஙனம் உணர்ந்துகொண்டபின் அச்சிவநிலை உங்களது உடலின்கண் “ஊமையானகாயமாக” – மௌனநிலையாகக் குடிகொள்ளும்.
சாமம்நாலு வேதமுஞ் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதினுஞ் சிவனைநீ ரறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே யுணர்ந்தபின்
ஊமையான காயமா யிருப்பனெங்க ளீசனே
என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

மறைநூல்களும், சாத்திரங்களும் மெய்ப்பொருளிருக்குமிடத்தையும், அதனை அடையவேண்டிய முறையையும் குறிப்பால் காட்டுகின்ற தாற்காலிகமான வெறும் கருவிகளேயன்றிச் சுயமாகக் கடைப்பிடித்தொழுகவேண்டிய பயிற்சிக்கு ஈடாகமாட்டா. வேதங்களோதுவது வெறுமொரு சமயச் சம்பிரதாயம் ஆகிவிட்ட நிலையில், அதைக் கண்டிப்பதற்கு சிவவாக்கியர் இந்தப் பாடல்களைப் பாடியிருக்க வேண்டும்.  
வேதமோது வேலையோ வீணதாகும் பாரிலே  என்றும்,
இட்டகுண்ட மேதடா விருக்குவேத மேதடா
சுட்டமட் கலத்திலே சுற்றுநூல்க ளேதடா
என்றும் சினத்துடன் வினவுகின்றார்.
சாதிப்பிரிவினை எதிர்ப்பு:
கடவுட்பாகுபாடுகளை எதிர்ப்பதுபோலவே சாதிப்பிரிவினைகளையும் கடுமையாக எதிர்க்கிறார் சிவவாக்கியர். அவரது காலத்தில் சாதிபேதம் பாராட்டுவது மிக மோசமன நிலையில் இருந்திருக்க வேண்டும்.  மேற்குடியினர் கீழ்க்குடியினரை மிகக் கேவலமாக நடத்தியிருக்க வேண்டும். சாதிகளின் பேரால் நிகழும் இக்கொடுமைகளைக் கண்டு சிவவாக்கியர் குமுறுகிறார். அவரது வெகுளி இப்பாடலில் பெருக்கெடுத்து எழுகிறது.
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினும் இலக்கமிட் டிருக்குதோ
சாதிப்பிரிவையொட்டி மனிதர்களின் மாமிசம், தோல், எலும்பு ஆகியவற்றில் வேறுபடுத்திக்காட்ட இலக்கங்கள், அடையாளங்கள் இடப்பட்டிருக்கின்றனவா என்று சிவவாக்கியர் குமுறுகின்றார்.
சாதியென்பது என்ன என்ற கேள்வியை எழுப்பி அதனுடைய குறிக்கோளின்மையை
சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்
பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னொன்றலோ
சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே
என்று எடுத்துக் காட்டுகின்றார். அதாவது, மனிதர்கள் எச்சாதியைச் சார்ந்தவராயினும் பஞ்சபூதச் சேர்க்கையாலான உடலையே அனைவரும் கொண்டுள்ளனர். பொன்னாலான அணிகலன்கள் அவற்றை அணிபவரின் சாதியையொட்டி மதிப்பை இழப்பதில்லை என்பதே.

பிறப்பினால் ஒருவன் கீழ்ச்சாதியில் தள்ளப்படும் கொடுமையை வன்மையாகக் கண்டிக்கிறார் சிவவாக்கியர்.
பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்துடன் பிறந்ததோ பிறங்குநாட் சடங்கெலாம்
அதாவது, தாயின் வயிற்றினின்றும் பிறந்த காலத்திலேயே கோவணம், பூணூல், குடுமி இவைகளும், அந்தந்த நாட்களில் செய்யப்படும் சடங்குகளும் கூடவே பிறந்தனவோ என்று பரிகாசமாகக் கேட்கிறார்.
வேதியர்போன்ற உயர்குடிகளிற் கடைப்பிடிக்கும் உடல்சார்ந்த எச்சில், தீட்டு முதலானவற்றைத் ஆசாரத்தூய்மை கெட்டவையாக மதிக்கும் வழக்கத்தையும் சிவவாக்கியர் கண்டிக்கின்றார்.  வாயினாற் குடித்தநீர் எச்சிலாகுமெனின் எச்சிலல்லாத வத்து யாதொன்று என்பது அவருடைய கேள்வி.
ஓதுகின்ற வேதமெச்சி லுள்ளமந்திரங்க ளெச்சில்
போதகங்க ளானதெச்சில் பூதலங்க ளேழுமெச்சில்
மாதிருந்த விந்துவெச்சில் மதியுமெச்சி லொலியுமெச்சில்
ஏதிலெச்சி லில்லதில்லை யில்லையில்லை யில்லையே என்கிறார்.

உணவுஉண்ட கலத்தை எச்சிலென்று கூறி தூக்கியெறிகின்றீர்கள்; அப்போது அதிலிருந்து எடுத்து உண்ட உமது கைகள் எச்சிலல்லவோ? அந்தக் கை மட்டும் கடவுளுக்கு ஏற்றுக்கொள்ளத் தக்கதோ? அக்கையில் தண்ணீர் படும்போது மட்டும் அந்த அசுத்தம் எப்படி மறைகிறது? என்பதும் அவருடைய ஐயவினா.
உண்டகல்லை யெச்சிலென் றுள்ளெறிந்து போடுறீர்
கண்டவெச்சில் கையலோ பரமனுக்கு மேறுமோ
கண்டவெச்சில் கேளடா கலந்தபாணி யப்பிலே
கொண்டசுத்த மேதடா குறிப்பிலாத மூடரே என்று கேட்கின்றார்.

வேதியர்கள் ஆன நீவிர் இறைவனையுணர்ந்தவர்களாயின்  அனைத்தும் அவனல்லாது எச்சிலென்று என்னவுள்ளது?
வாயிலெச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில்போன வாறதென்ன தெவ்விடம்
வாயிலெச்சி லல்லவோ நீருரைத்த மந்திரம்
நாதனை யறிந்தபோது நாடுமெச்சி லேதுசொல்
என்று வினா எழுப்புகிறார்.

அதுமட்டுமன்று, தூய்மையாக்கி வைத்திருக்கின்ற நுமது உடல் எச்சிலாகும். அபிடேகமாக நீங்கள் வைத்திருக்கின்ற தேன் என்பது தேனீயின் எச்சிலாகும். அர்ச்சனை செய்யும் பூக்கள் வண்டுகளின் எச்சிலாகும். பசுவின் மடியில் கைவைத்துக் கறந்த பாலும் எச்சிலாகும். பின்பு எதை நீங்கள் எச்சில், எச்சில் என்று பழிகின்றீர்கள் எனச் சிவவாக்கியர் கேட்டிருப்பது சிந்திக்கத் தக்கது.
எச்சிலெச்சி லென்றுநீ ரிடைந்திருக்கு மேழைகாள்
துச்சிலெச்சி லல்லவோ தூயகாய மானதும்
வைத்தவெச்சில் தேனலோ வண்டினெச்சில் பூவலோ
கைச்சுதாவில் வைத்துடன் கறந்தபாலு மெச்சிலே
சிலைவழிபாட்டு மறுப்பு:
சமயம் ஒரு சமூக அமைப்பாக மாறும்போது கூடவே அதையொட்டிய நெறிமுறைகளும், வழக்கங்களும் உருவாகத் தொடங்குகின்றன. ஆனால் அவை மக்களின் சமய உணர்விலுள்ள தூய்மையை நாளடைவில் குறைத்து விடவும் செய்கின்றன.   சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பது என்பது தன்னிலை உணர்வதைவிட முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகின்றது.

காலம் செல்லச்செல்ல இவையே பெரும் தளைகளாகவும் மாறி விடுகின்றன. மெய்யறிவை நாடும் மனித சமுதாயம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடவேண்டுமென்பதே சிவவாக்கியரின் ஆவல். அந்த வகையில் உருவ வழிபாட்டையும், புண்ணியத் தலங்களை நோக்கியுள்ள யாத்திரை, தீர்த்தங்களில் முழுகுதல், தவவேடச்சின்னங்கள் அணிதல் முதலான சடங்குகளையும் அவர் அறவே மறுக்கின்றார்.  இவற்றைக் கடுமையாகக் கேலி செய்கின்ற போக்கு இவருடைய பாடல்களில் மிகுந்திருப்பதைக் காணலாம்.
உருவ வழிபாட்டை தீவிரமாகக் கண்டனம் செய்கிறார் சிவவாக்கியர்.
செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவனிருப்ப னென்கிறீர்
கல்லிலும், உலோகத்திலும் பொம்மைசெய்து வைத்துகொண்டு அதில் சிவனைத் தேடிப் பொழுதை வீணழிக்கிறீர்களே என்று வருந்துகிறார்.

உடைக்கப் பட்ட கல்லின் ஒருபகுதி வாயிற்படியில் மிதிகல்லாகவும், மற்றொரு பகுதி கருவறையுள் கடவுள் சிலையாகவும் மாறுவதைக் கண்டு சிவவாக்கியர் வியக்கிறார்.
ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டு செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவேமி திக்கிறீர்
பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீருஞ் சார்த்துறீர்
ஈசனுக் குகந்தகல் எந்தகல்லு சொல்லுமே என வினவுகின்றார்.

தத்துவங்களைச் சடங்காக்கி இறைவனைக் கல்லாக்கிவிட்ட மூடர்கள் உயிரோடுயிராகக் கலந்து நிற்கும் இறைவனைக் காண மறுப்பதை எண்ணிச் சிரிக்கின்றார் அவர்.
சாவதான தத்துவச் சடங்குசெய்யு மூமைகாள்
தேவர்கல்லு மாவரோ சிரிப்பதன்றி யென்செய்வேன்
மூவராலு மறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக வும்முளே கலந்திருப்பன் காணுமே  என்கிறார்.

மெய்யான இறையனுபூதியை நேரடியாகப் பெறவேண்டுமேயல்லாமல் மற்றொரு உபாதிமூலமாக அதைப்பெற விழைவது மூடத்தனம் என்பதே சிவவாக்கியரின் கருத்து. சிற்பிகளின் கைவேலைப்பாடான சிலையுருவங்களை உயர்ந்த தெய்வமென்றெண்ணி அவற்றிற்குப் பெயர்களையும் இட்டு அழைக்கின்றீர்கள் அனைத்தயும் படைத்த முழுமுதற்கடவுளை உம்முள்ளத்தில் சிந்தனை செய்யுங்கள் எனும் அவரது அறிவுரையை 
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள தென்றுநீர்
எண்ணமுற்று மென்னபே ருரைக்கிறீர்க ளேழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத் தளிக்கவும்
ஒண்ணுமாகி யுலகளித்த வொன்றைநெஞ்சி லுன்னுமே
என்ற பாடல் வெளிப்படுத்துகின்றது.
கட்டையாற்செய் தேவருங் கல்லினாற்செய் தேவரும்
மட்டையாற்செய் தேவரும் மஞ்சளாற்செய் தேவரும்
சட்டையாற்செய் தேவரும் சாணியாற்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்ற வேறுதெய்வ மில்லையே
என்று இறைவன் உருவற்றவன் என்பதனை உறுதியாக மொழிகிறார்.

சிலைவழிபாடு ஒருக்காலும் மெய்யான இறையின்பத்தையளிக்காது என்றும் சிவவாக்கியர் முடிவாகக் கூறுகிறார்.
கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடுந் தராக்களில்
வல்லதேவ ரூபபேத மங்கமைத்துப் போற்றிடின்
தொல்லையற் றிடப்பெருஞ் சுகந்தருமோ சொல்லுவீர்
இல்லையில்லை யில்லையில்லை யீசனாணை யில்லையே
ஆலய வழிபாடு, புனிதநீராடல் முதலானவற்றின் வீணான தன்மை:
சிலை வழிபாட்டைக் கண்டனம் செய்வதோடு, ஆலய வழிபாடு, ஆறுகுளங்களில் புனிதநீராடல், புண்ணியத் தலயாத்திரை முதலான நடவடிக்கைகளையும் சிவவாக்கியர் மட்டுமீறிய கடுமையுடன் இகழ்கிறார்.

யாராலும் ஆக்கவும் அழிக்கவும் இயலாத கோயிலும், குளங்களும் மனிதனின் மனத்தினுள்ளே இருக்கையில்,
கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லையில்லை யில்லையே
என்று கோயில் குளங்களை நாடுவதை விட்டுவிட்டுக் கடவுளை உங்களுக்குள்ளேயே கண்டுகொள்ளுங்கள் என்கிறார்.
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி யோடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதனுண்டு நம்முளே என நல்ல புண்ணிய தீர்த்தங்கள் எங்கேயென்று நாடியோடும் மாந்தரை அறைகூவி விளிக்கிறார்.
கண்ணனின் பக்தையான மீராபாய் தனது பாடலில் தினமும் குளிப்பதனால் ஹரி கிடைப்பானாயின் நானொரு மீனாகவோ மற்றேதேனும் நீர்வாழ் உயிரினமாகவோ பிறக்க விழைகிறேன் எனக்கூறியுள்ளார்.  இதே கருத்தையே சிவவாக்கியரும்,
காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும்
அதாவது காலையும் மாலையும் தண்ணீரிலே மூழ்கினால் இறைவனருள் கிட்டுமாயின் எப்போதுமே நீரில் கிடக்கின்ற தேரையும் இறைவனுருள் பெற்றுவிடுமா? என்ற கேள்வியை விடுக்கிறார்.

இவ்வூரிலில்லாத இறைவன் அவ்வூரிலிருப்பான் என்று என்ன உறுதி?
இந்தவூரி லில்லையென் றெங்குநாடி யோடுறீர்
அந்தவூரி லீசனும் அமர்ந்துவாழ்வ தெங்ஙனே என்று கேட்கின்றார்.

தீர்த்தலிங்க மூர்த்தியென்று தேடியோடும் தீதரே
தீர்த்தலிங்க முள்ளினின்ற சீவனைத் தெளியுமே,  அதாவது
தீர்த்தம், லிங்கம், மூர்த்தி என்று ஊரூராகச் சென்று தேடுவோரே! அவை அனைத்தையும் உம்முள்ளேயே கொண்டுள்ள உம் சீவனை உன்னிப்பாகக் கவனிப்பீராக என்று அறிவுரை புகட்டுகின்றார்.  காடுமேடு குன்றுபள்ளங் கானினா றகற்றியும் நாடுதேசம் விட்டலைவர் நாதன்பாதங் காண்பரோ? இல்லை. இறைவனை மனத்துள் அல்லால் எங்குத் தேடியும் பயனில்லை.
போலிக்குருமார்களைப் பழித்தல்:
போலித்துறவிகளையும், பொய்த் தவவேடமணிந்தவர்களையும் நையாண்டிசெய்வதில் சிவவாக்கியர் ஒருபோதும் இரக்கம் காட்டியதில்லை.  அகநிலையனுபூதி பெற்ற மெய்யடியார்கள் தம் நிலையை எப்போதும் மறைத்து வைத்திருப்பர். அதல்லாதவர் வெளிவேடங்களாலும் நடிப்புக்களாலும் தம்புகழ்பாடித் திரிவர். சிவவாக்கியர் அத்தகைய போலி ஞானிகளை நாய்களுடன் ஒப்பிட்டு 
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள்கோடி கோடியே
என வெளிப்படையாகத் தாக்குவதற்கும் அஞ்சவில்லை.
குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கடோறு மூழ்கிறீர்
மண்டுகங்கள் போலநீர்  மனத்தின்மா சறுக்கிலீர் என்றும்,
வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமுந் தரிக்கிறீர் என்றும்,
காவியுஞ் சடாமுடிக் கமண்டலங்க ளாசனம்
தாவுருத்தி ராட்சம்யோகத் தண்டுகொண்ட மாடுகள் என்றும்
முத்திசேரச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லியெங்குஞ் சாமிவேடம் பூண்டவர் என்றும்
நீரினிற்கு மிழியையொத்த நிலையிலாத காயமென்
றூரினிற் பறையடித்து உதாரியாய்த் திரிபவர் என்றும்
பலவிதமாகக் கபடத்துறவி வேடம்போட்டவர்களிடம் சிக்காமலிருக்கப் பல பாடல்களில் மக்களைச் சிவவாக்கியர் எச்சரிக்கிறார். அவர்களைத் தனது பல பாடல்களிலும் வேடமிட்ட மூடர், சாத்திரச் சழக்கர், பாதகக் கபடர், மதியிழந்த பித்தர், மடிப்புமோசஞ் செய்பவர், கருத்தழிந்த கசடர், பிரக்ஞைகெட்ட மூடர், குணங்கெடுங் குருக்கள் என்றெல்லாம் பலவாறாக வசைபாடுகின்றார்.
“மெதுவாக முணமுணவென்று சொல்லி உட்கார்ந்திருக்கும் மூடர்களே! நீங்கள் அள்ளி அள்ளி நீரை மேலெ எறிந்ததேது? உள்ளங்கையாற் குழைத்ததேது? திருட்டுவேடம் தரித்ததேது?  கண்ணைமூடி விட்டதேது? அதன் விசேடத்தைச் சொல்லுவீர்களாக”
அள்ளிநீரை யிட்டதே தகங்கையிற் குழைத்ததேது
மெள்ளவே முணமுணென்று விளம்புகின்ற மூடர்காள்
கள்ளவேட மிட்டதேது கண்ணைமூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர் என்று கேட்கின்றார்.
மனதிலுள்ள ஆசையெனும் மாயக்கட்டவிழ்ந்து ஆழமான ஆன்மிகஞானம் கைவரப்பெற்ற யோகியர் மங்கையின் மார்பகத்தடியில் இருந்தாலும் அவர்கள் உலகமயக்கத்திற்கு வயப்படாமல் வினைத்தொடரை அறுத்தெறிந்து இருப்பர்.  ஆனால் மனவொடுக்கம் பெறாததால் பற்றறாத ஒரு யோகி மௌனம்பூண்டு வனத்தில் வாழ்ந்தாலும், மனதின்கண்ணுள்ள மாயையை அறுத்தொழித்தவராக மாட்டார் என்பதனை சொல்நயம் படைத்த அருமையான ஒரு பாடலால்ச் சிவவாக்கியர் உரைக்கின்றார்.  
மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத் திருப்பினும் மனத்தகத் தழுக்கறார்
மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத் திருப்பினும் பிறப்பறுத் திருப்பரே.
பெண்ணின் நிலைபாடு:
தமிழ்ச்சித்தர்கள் காம இன்பம் துய்ப்பதைப் பெரும்பாவமாகவே கூறியிருக்கின்றனர். பொதுவாக பெண்ணாசையைக் கண்டனம் செய்யும் வகையில் பெண்களைப் பழித்துரைக்கின்றனர். சிற்றின்பத்தில் மூழ்கிப் பேரின்பத்தை அடைய முடியாமல் தடுமாறும் மாந்தர்களுக்கு அறிவுரை சொல்லுகின்றபோது, வாழ்க்கையின் நிலையாத்தன்மையை உணர்த்துவதற்கு அவர்கள் பெண்மயக்கத்தை, முக்கியமாக விலைமகளிரிடம் ஆண்கள் சிக்கிச் சீரழிவதைக் கண்டித்துப் பாடியதாகக் கருத வேண்டுமேயல்லால், சித்தர்கள் பெண்ணினத்தையே முற்றாக வெறுத்து இருப்பார்கள் என்று எண்ணுவதற்கு இடமில்லை. சிவவாக்கியத்திலும் பெண்ணாசையால் மதிமறக்கும் மானிடர்களைத் தூற்றும் பாடல்களிருப்பினும் பெண்களுக்குத் தூய்மையின்மையைக் கற்பித்துத் தரம் தாழ்த்துவதைப் பல பாடல்களில் சிவவாக்கியர் கண்டித்துள்ளார். முக்கியமாகப் பெண்களின் மாதவிடாய் நாட்களில் பெண்ணை அசுத்தமடைந்தவள் என ஒதுக்குவதை மிகவும் துணிவுடன் அக்காலத்திலேயே எதிர்த்தபெருமை சிவவாக்கியரைச் சேரும்.
தூமைதூமை யென்றுளே துவண்டலையு மேழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோன தெவ்விடம்
தாயான பெண்ணின் இரத்தத்திலிருந்தே குருக்கள், தேசிகர்கள் முதலான பேராளர்களுக்கும் பிறவி பெற்றனர். அவளுடய உதிரமானது அவளுக்குள்ளேயே எக்காலமும் இருக்கின்றது. அப்படியிருக்க அம்மூன்று நாட்கள் மட்டும் பெண்ணைத் தீண்டத்தகாதவளாக்கித் துவண்டலைகின்றீர்களே என்று விசனத்துடன் கேட்கின்றார்.  ஆய்வறிவின் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லாத மூடவழக்கங்களை, அவை எத்தகைய மறைவான, கொச்சையான தன்மையுடையவையாயினும், அப்பட்டமாகக் கண்டிப்பதில் சிவவாக்கியர் ஒருபோதும் தயங்கியதில்லை.
அதுமட்டுமன்று, பெண் ஒரு சக்தியாக மாட்டிக்கொண்டதனாலேயே சிவனாரும் கங்கையைத் தனது தலைமேல் வைத்து மகிழ்ந்திருக்கின்றார். அதனால் மனைவியோடு சேரும்போது தான் மனிதர் வாழ்வு சிறக்கும் என்பதை 
மாதர்தோள்சே ராததேவர் மாநிலத்தி லில்லையே
மாதர்தோள்பு ணர்ந்தபோது மனிதர்வாழ்சி றக்குமே
மாதராகுஞ் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டா னீசனே
என்று தெளிவுபடுத்துகின்றார்.
அறவழியின் சிறப்பு:
பூசை, நியமம், நிட்டை முதலானவற்றை வெளியார் மயங்கச் செய்தாலும், அறவழியில் செல்லாது அந்நியர் பொருள்களின் மேல் ஆசை வைத்துத் தினந்தோறும் அவற்றை மோசஞ்செய்து அபகரிப்பதற்காக எப்போதும் அலைந்து திரிபவர்களுக்கு எழுநரகங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன; இது உண்மையாகும்.
ஆசைகொண்டு அனுதினமு மன்னியர் பொருளினை
மோசஞ்செய்து அபகரிக்க முற்றிலும் மலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்
காசினியி லெழுநரகைக் காத்திருப்ப துண்மையே
என அதருமவழியைப் பின்பற்றினாலுண்டாகும் விளைவை எடுத்துக்கூறி எச்சரிக்கின்றார் சிவவாக்கியர்.

அறவழி பின்பற்றுவதற்கான மனோதிடமின்றிப் பிறர்பொருளை எதிர்நோக்கி அதன்பின்னே ஊரெல்லாம் சுற்றி அலைந்து சுற்றத்தாரால் இகழப்படுகின்ற அவலநிலயை அடைந்தவர்களை,
மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினமூ ரெங்குஞ்சுற்றித் திண்டிக்கே யலைபவர்
இனமதிற் பலர்கள்வையும் இன்பமற்ற பாவிகள் என்றும் சாடுகின்றார்.
அளப்பரிய செல்வம் சேர்த்து வைப்பினும் எமனோலை வருகின்ற காலத்தில் குறுக்கே வந்து தடுக்க மாட்டா. பாத்திரமறிந்து ஓடிச்சென்று இட்ட பிச்சையும், மன உவப்போடு செய்த தருமச்செயல்களும் மட்டுமே வந்துதவும் என்பதை,

ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினுங் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்துசெய்த தருமமும்
சாடிவிட்ட குதிரைபோல் தருமம்வந்து நிற்குமே
என்ற பாடலால் விளக்குகிறார்.
அவாவொழித்தலே மனநிறைவுக்கான வழி என்பதே சித்தர்களின் பொதுவான கோட்பாடு. அறவழியில் நின்று முத்தி நாடுபவரும், முத்திக்கான ஆசையை நீப்பது அவசியம்.
ஆசையறுமின்கள் ஆசையறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசையறுமின்கள் என்பது திருமந்திரம்.
அவ்வழியிலேயே, சிவவாக்கியரும் ஆசையை ஒழிப்பீரானால் நாடும் அந்த தத்துவப்பொருள் தானேவந்து கைகூடும் என்பதனை
வேணும்வேணு மென்றுநீர் வீணுழன்று தேடுவீர்
வேணுமென்று தேடினாலு முள்ளதல்ல தில்லையே
வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின்
வேணுமென்ற வப்பொருள் விரைந்துகாண லாகுமே என்கின்றார்.
முடிவுரை:
ஆக, இதுகாறும் கூறப்பட்டவற்றிலிருந்து, சிவவாக்கியர் மரபொழுங்கு சார்ந்த பற்பல மூடநம்பிக்கைகளையும், அவரது காலத்திலும் நிலவிவந்த சமய சம்பிரதாயங்களையும், ஆன்மிகத்தின்பேரால் போலித்தனங்கள் உருவாவதையும் கடுமையாக எதிர்த்தவர் என்று தெரியவருகிறது.  உண்மையான தமிழ்ச் சித்த சித்தாந்த மரபையொட்டி,  உயிரினங்களின் ஒருமையில் நம்பிக்கைகொண்டு, அன்பு, தொண்டு, மெய்யறிவை நாடும் உள்முகநோக்கு, முதலான சீரிய கொள்கைகளைத் தனது தனிச்சிறப்புப் பெற்ற, மனதில் ஆழப்பதியும் பாடல்களால் மக்களுக்கு அறிவூட்டியுள்ளார் சிவவாக்கியர். அவரது பாடல்களிலேயே மிகுதியாகப் பேசப்படுகின்ற “நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சார்த்தியே” முதலான அவருடைய புரட்சிகரமான பாடல்களாலும், கோயில் வழிபாட்டு மரபையும், அர்த்தமற்ற சமயச் சடங்குகளையும் அவர் கடுமையாகக் கண்டனம் செய்வதாலும், மேலோட்டமான பார்வையில் அவர் ஒரு பழமரபு ஒழிப்பாளர் (iconoclast) எனப் பொதுவாகக் கருதப்படினும், மனிதன் தனது உள்ளத்தைச் சுத்திசெய்து, இறைவன் உறையும் கோயிலாக மாற்ற இடைவிடாது முயலவேண்டியதன் இன்றியமையாமையையும் தனது பல பாடல்களிலும் மிகத்தீவிரமாக எடுத்துரைத்திருக்கின்றார் சிவவாக்கியர்.  தன்னுயிர் போலவே மன்னுயிர் கருதல் எனும் மனிதநேயப் பண்பிற்கும், உண்மையான இறையுணர்வுக்கும் அன்பிற்கும், தொண்டிற்கும் ஈடாக அமைந்த வீண் சமயநெறிகளையும், சாதியின்பேரால் விளைந்த பிரிவினைகளையும் அறவே மதிக்காதவர் அவர்.

ஆன்மாவின் விடுதலையைத் தடைப்படுத்தும் தளைகள் என்பதனால் சிலை வழிபாட்டையும், சமய நியமங்களையும், இறைவனிடம் மன்றாடியிரக்கும் பிரார்த்தனை முறைகளையும் அவர் கண்டனம் செய்தார்.  “உருக்கிநெஞ்சை யுட்கலந்து வுண்மைகூற வல்லிரேல், சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே” எனத் தனக்குள்ளேயே ஆழமாக இறங்கிச்சென்று தேடுவதே அவர் கண்ட முக்திக்கான வழியாகும். சிவவாக்கியரின் கோட்பாடுகளில் வெளிப்படையான, தனிச்சார்பற்ற தன்மையையும், கபடமற்ற ஒரு முழுநிறைவான தெளிவையும் காணலாம்.

குழப்பம் உருவாக்கும் உட்பிரிவுகள் நிறைந்த சமயச்சார்பு புறக்கணிக்கப்பட வேண்டியது என்பதே சிவவாக்கியரின் முக்கியமான கொள்கை.  சமூக அங்கீகாரம் பெற்ற மதங்களுடனும், புரோகித, துறவமைப்பு சம்பிரதாயங்களுடனும், புனிதத்தலங்களுடனும், சமய நெறிச்சாதனங்களுடனும் எந்த ஒத்துணர்வுமற்றவர் சிவவாக்கியர்.  ஒழுங்குமுறையான ஒரு புதிய அமைப்பையோ, முன்னில்லாத ஒரு சம்பிரதாய வகுப்பையோ கட்டியுருவாக்குவதன்று அவரது நோக்கம். பயனற்ற நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதிலிருந்தும், சமயம் என்ற பேரால் ஆய்வுத்திறம் சீரழிவதிலிருந்தும் மாந்தர்களை விழித்தெழச்செய்வதே அவரது இலக்காகும். 
இவ்வகையிலான சமூக, சமயச் சீர்திருத்தப் புரட்சிக்கான உறுதிமிக்க அறைகூவல் விடுத்ததில் சிவவாக்கியர் நிச்சயமாக வெற்றிகண்டுள்ளாரென்றே கூறவேண்டும். சமய உணர்வில் தோய்ந்துள்ள மூடநம்பிக்கைகளும், சமய வினைமுறை சார்ந்த சடங்குவெறிகளும் சமுதாயத்தில் தலைவிரித்து ஆடும்போதெல்லாம், குருட்டுப் பழக்கவழக்கங்களும், போலிக் கோட்பாடுகளுமான புதைகுழிகளில் சமுதாயம் சறுக்கி விழாமலிருக்கவும், மெய் எது என்று உணர்ந்து, மனிதன் தனது வாழ்நாளில் கடைப்பிடித்துப் பெறவேண்டியது யாது என்பதனைச் சுட்டிக்காட்டவும் சிவவாக்கியத்தின் சீர்திருத்தச் சிந்தனைகளும், புரட்சிகரமான அறிவுரைகளும் எல்லாக் காலங்களிலும் எதிரொலித்துக்கொண்டேயிருக்கும் என்று ஐயமறக் கூறலாம்.
———- உ.இரா.கிரிதரன்.

Tuesday, December 14, 2010

ஓலை வந்த உடன் திருமந்திரம்

ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
...ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே
 
 
பிரமன், திருமால், உருத்திரன், மகேசன் மற்றும் சதாசிவன் ஆகியோருக்கு தொழில் செய்ய ஒரு நிலம் போல் மனித உடல் தரப்பட்டது. அவ் ஐவரும் [பஞ்சபூதங்கள் கொண்டு] அதனை நன்றாகவே பேணி வந்தமையால், அந்நிலமும் நன்றாகவே விளைவைக் கொடுத்தது. இவர்களின் நாயகன் / தலைவனான சிவனிடம் இருந்து ["காலம் முடிந்தது என்று"] ஓலை வந்த உடன் இவர்கள் தங்கள் வேலையை விடுத்தனர்.

Thursday, December 9, 2010

நாகபஞ்சமி

நம் நாட்டில் பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடி பூஜித்து வரும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பல கோயில்களில் அரசமரத்தின் கீழ் பெரிய நீளமான கற்களில் பாம்பு உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அதற்கு மக்கள் மஞ்சள், குங்குமம் இட்டு, பால் அபிஷேகம் செய்து பூசிப்பார்கள். ராகு கேது தோஷம் இருப்பவர்களும் இதைப் பூசிக்கின்றனர். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ஊர்கள் நாகபூஜைக்கு மிகப் பிரபலமானவைகள்.

நாகத்திற்காக சிறப்பு பூஜை செய்யும் நாளொன்றும் உண்டு. ஆவணி மாதம் வரும் பஞ்சமி
திதியில் "நாகபஞ்சமி" என்ற திருநாள் வருகிறது. 


நம் பாம்பாட்டிச் சித்தரும் பாம்பின் சிறப்பைப்பற்றி பாடல்கள் இயற்றியிருக்கிறார்.

"நாதர்முடி மேலிருக்கும் நாகப்பாம்பே "என்ற பாடலில்,
"குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்,
குருந்திரு மாயனுக்குக் குடைநீயானாய்,
கற்றைக்குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்”
என்று நாகத்தின் சிறப்புகளைச் சொல்கிறார்.

Tuesday, December 7, 2010

குண்டலினி இயக்கம்





 மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

பொழிப்புரை :

மூன்று வளைவை யுடையதாகிய பாம்பு, பதினாறு அங்குல அளவினவாகிய கயிறுகளைக் கொண்ட பூட்டையில் அழுந்தப் பொருந்தி யிருக்குமாயின், உடம்பு அழியாது நிலை பெற்றிருக்கும். அப்பாம்பு அங்ஙனம் பொருந்தி நிற்றற்கு, மேற்கூறிய பூட்டையில், அவிழ்ந்து கிடக்கும் நிலையினவாய்ப் பன்னிரண்டங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டைகள், அவிழ்ந்து வீழாதவாறு கட்டப்படல் வேண்டும்

குறிப்புரை :

``பாம்பு`` என்றது குண்டலினியை; ``இயந்திரம்`` என்றது நடுநாடியை. `பதினாறு அங்குலக் கயிறு` என்றது, அந்நாடியுள் பதினாறு மாத்திரையளவு பூரிக்கப்படும். பிராணவாயுவை, `பன்னிரண்டு அங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டை`` என்றது, இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பிலே பன்னிரண்டங்குலம் வெளிச் செல்லும் பிராண வாயுவை. `அம் மூட்டையை அவிழ்ந்து வீழாமல் கட்டுதல்` என்றது, அந்த இரு வழியையும் அடைத்தலை. எனவே, `இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பாக இயங்குகின்ற பிராண வாயுவை அடக்கிப் பதினாறு மாத்திரையளவு நடுநாடி வழிப் பூரித்துக் குண்டலி சத்தியை நடு நாடியில் பொருந்தி யிருக்கச் செய்தால், உடம்பிற்கு அழிவு உண்டாகாது` என்பது இம் மந்திரத்தால் போதரும் பொருளாம்.`மூன்று மடக்கு` என்றது, உடம்பில், `அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்` எனப் பகுக்கப்படும் மூன்று வட்டங்களை. அம்மூன்றிலும் குண்டலினி வியாபித்துள்ளமை அறிக. இனி, `அப் பாம்பு அவ் யந்திரத்தில் ஊன்றி யிருக்க` என்றது, பொது மக்களிடத்து உணர்வின்றித் தூங்குவது போல் இருக்கின்ற நிலையில் லாமல், விழித்திருப்பதுபோல் செயற்படும் நிலையில் நிற்க, என்றதாம். பிராண வாயுவால் சட ஆற்றல் மிக்கு நிற்கும் உடல் உறுப் புக்கள், பின் அறிவாற்றலால் தூண்டப்படுதலும் அவை செயற் பாடின்றிக் கெட்டொழியாமைக்கு ஏதுவாம் என்க. குண்டலியின் தன்மை மேலே பலவிடத்தும் விளக்கப்படது. ``கட்டியிட்டு`` என்பதில் `இட்டு` அசைநிலை. `பாம்பு, இரண்டு எட்டுள இயந்திரத்தில் நான்ற மூட்டை இரண்டையும் கட்டி ஊன்றியிருக்க உயிர் அழியாதே` என வினை முடிவு செய்க. ``இரண்டெட்டு`` என்பது எண்ணலளவை யாகுபெயர். `முட்டை` என்பது பாடம் அன்று.இதனால், காய சித்தி உபாயங்களுள் குண்டலினி இயக்கம் இரண்டாவதாதல் கூறப்பட்டது

சிவவாக்கியர் சித்தர் பாடல்

மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?

 

பெண்களுக்கான மாதவிலக்கு தூய்மையானது தான். பருவ காலத்தில் கரு உண்டாகும் காலத்தில் இது நடக்காது. இப்படி பட்ட விஷயம் பின் எப்படி தூய்மை அற்றதாகும்? வேதம் ஓதும் வேதியரே.. எல்லாம் தூய்மையில் இருந்து வந்தது தானே..!!

சிவவாக்கியர் சித்தர் பாடல்

சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே!
சுத்தம்ஏது? கட்டதேது? தூய்மைகண்டு நின்றதுஏது?
...பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே? 

 

 

ஓம் என்னும் ஒலி வழியாக மழை நீராக வந்ததில் மூழ்கி வினை தீர்ந்தது, சுத்தம் ஆகிவிடோம் என்று எண்ணும் மூடரே, சுத்தம் எது? அக சுத்தமா? புற சுத்தமா? தீயாக சுட்டது எது ? என்பதை அறிந்து எது பேதம் இல்லாத மெய்பொருள் என்று உணர்ந்து திளைத்திடுங்கள்


காகபுசுண்டர் பாடல்

காகபுசுண்டர் உபநிடதம்

தானென்ற குருவினுபதேசத்தாலே
...தனுகரண அவித்தையெல்லாந் தவறுண்டேபோம்
வானென்ற சுவானுபவ ஞான முண்டாம்
மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்
நானென்ற பிரபஞ்ச வுற்பத்திக்கு
நாதா நீதக்யானம் நன்றா யெய்தும்
கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன
குறிப்பான யோகமிதைக் கூர்ந்து பாரே

 




பொருள்

தன்னைதான் அறிந்த நல்லாசிரியரின் அறிவுரையாலே உடல் கருவி அனுபவநிலைகளால் உண்டான தவறுகள் எல்லாம் போகும்

உயர்ந்த மேலான அனுப ஞானம் உண்டாகும். மவுன யோக வாழ்க்கை எய்தலாம். நானென்ற சுயபிரக்ஞை உடைய பிரபஞ்ச உயிர்களின் உற்பத்திக்குரிய நாலாவிதமான... அறிவு அடையலாம்.

ஆசிரியரான கொங்கணவர் எமக்குரைத்த யோகத்தை கூர்ந்து பாருங்கள்

பாம்பாட்டிச் சித்தர் பாடல்

வேதப்பொருளின்ன தென்று வேதங் கடநத
மெய்ப்பொருளைக் கண்டுமனம் மேவிவிளம்பிப்
போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
...பூரணசற் குருதாள் கண்டாடாய் பாம்பே

 

பொருள்

வேதத்தின் பொருள் என்ன என்ன என்பதை வேதத்திற்கும் அப்பாற்பட்டு நின்ற மெய்ப்பொருளைக் கண்டு மனதினை ஆய்ந்து உரைத்து அறிவாய் நின்ற பொருள் இதுதான் என்று அறிவுறுத்தும் முழுமை பெற்ற நல்லாசிரியரின் அடிபணிந்து ஆடுவாய் பாம்பே

நாதவெளி என்பது வேதம் ...உரைப்பதாகக் கூறப்படும் நிலை, நாதத்தையும் கடந்து நிற்கும் சுத்த வெளி நிலை ஆதி நிலை. இவ்வாதி நிலையில் அறிவும் அன்புமாகி முற்றுணர்ந்த நிலை . இந்நிலையை அடைவதை உரைக்கும் ஆசிரியரைப் பணிக என்பது விளக்கம்.

தியங்கினால் கெர்ச்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே
மயங்கினார் நாலுபா தத்தினுள்ளும்
...மனஞ் செவ்வையாவதெப்போ தறிவதெப்போ?
தயங்கினாரு லகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடி போலாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப்பாழே

 

பொருள்

சளியைச் சுற்றித் திரியும் ஈ போல உலகப் பற்றுக்களைச் சுற்றி இயங்கினால் மாயா சக்தியானது கோபமுற்று இச்சக மாயையுள் துரத்தும்.

சரியை,கிரியை,யோகம் ,ஞானம் என்ற நான்கு வழிச் செல்பவர்களும் இம்மாயையால் மயங்குவர்.
...
மனமானது எப்போது செம்மையாவது,மெய்ப்பொருளை அறிவது எப்போது?

கோடிக்கும் மேலான மக்கள் மெய்ப்பொருள் காண்பதற்குத் தயங்கினார்கள்.பிறப்பும் இறப்பும் சுழலும் காவடி ஆட்டம் போலாச்சு.

இச்சுழலால், சஞ்சிதம், பிராரப்த வினைப்பதிவு நிகழ்வுகளால் சோர்வுற்றனர். இச்சோர்வால் துயருற்றனர்.இத்துயரத்தால் ஞானம் மறைக்கப்பட்டது.

மாயை என்பதை மரணத் தறுவாயில் உணருவதால் என்ன பயன்?

சொற்பொருள் விளக்கம்

நாலுபாதம்- நான்கு வழிகள்- சரியை,கிரியை,யோகம்,ஞானம்

சண்ணுதல்- கோபமுறுதல்
சீறி-கடுங்கோபத்தால் விளையும் வினை
மிலேச்சர்- சிறிய தன்மையை உடையவர்(உலக மாயையை பெரிதென்று கொள்பவரைக் குறித்தது)
துயங்குதல்- சோர்வுறுதல்

 

 

காகபுசுண்டர்

காகபுசுண்டர் உபநிடதம் 31

ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு
...அத்துவிதம் பிரணவத்தினருளே காப்பு
நீதியா மாரூட ஞானம் பெற்ற
நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு
சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத்தொன்றிற்
துரியாதீதப் பொருளைத் துலக்கமாகத்
தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார்
சீவேச ஐக்யமது தெரியுந் தானே

பொருள்

குருபரனாய் இருந்து ஆதிநிலையிலிருந்து எனைத் தோற்றுவித்த ஆசிரியர் திருவடிகள் காப்பாக விளங்கட்டும்.

இரண்டல்லாது விளங்கும் அத்துவிதமான(அத்வைதம்) உயிர்பொருளின் அருள் காப்பாக அமையட்டும்.

இது சரி என்று வகுத்து வழி வழங்கும் ஆருட அறிவைப் பெற்ற மும்மலமும் அற்ற சித்தருடைய திருவடிகள் காப்பாக அமையட்டும்.

தெளிவான ஒளியைப் போல துரியாதீதத்தில் விளங்கும் பொருளை முப்பத்தொரு பாடல்களில் விளக்கமாக பாடிவைத்தேன்

தீமை பயக்கும் குணங்களில்லாதவர்கள் சீவன் ஈசன் இணைப்பைத் தெரிந்து தெளியட்டும்.

சொற்பொருள் விளக்கம்

அத்துவிதம்-->அத்வைதம்-->அ+த்வைதம்-->த்வைதம்-இரண்டு

அத்வைதம்-இரண்டற்ற நிலை.(ஓன்றும் இரண்டுமற்ற நிலை)

பிரணவம்-பிர்+அணவம்-->பிரு+அணம்+அவம்

பிரு -இசைஒலி
அணம்-உயர்ந்த
அவம்-தம் நிலையிலிருந்து கீழ்ப்படுதல்

பிரணவம் என்றால் ஆதாரமான சக்தி,தன் நிலையிலிருந்து சிறிது குறைப்பட்டு ஒலியாக விளங்குவது

;;

TIME