குருவே போற்றி ..



பாடினேன் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன்

பாலகனே புலிப்பாணி பகரக்கேளாய்
நீடியதோர் காலாங்கி கிருபையாலே
நீதியுடன் நெடுங்காலம் இருந்தேன் அங்கே
தேடியே காலாங்கி நாதர்தாமும்
தேற்றமுடன் தன்தனக்கு உகந்தசீடன்
நாடியே வேண்டுமென்று நன்மையாலே
நானவற்கு நற்சீடன் ஆகினேனே.

ஆகினேன் நெடுங்காலம் பணிதிசெய்து

அப்பனே சமாதிக்குப் பூசைசெய்தேன்
பாலில்விழும் ஈயைப்போல் பரதவித்தேன்
பட்சமுடன் என்மீதில் மனதுவந்து
சாகின்ற சடலமதுங் காயந்தந்து
சட்டமுடன் எந்தனுக்கு இதவுகூறி
மேதிடவே ஞானோபதேசம் சொல்லி
மேன்மையுடன் எந்தனை ஆசீர்மித்தாரே.

எந்தனையும் ஆசீர்மம் மிகவும்செய்து

எழிலான உபதேச உண்மைகூறி
அந்தமுடன் ஆதியந்த முடிவும் கூறி
அப்பனே யோகமென்ற வழியுங்காட்டி
விந்தையுடன் வையகத்து மகிமை கூறி
விட்டகுறை யாவனைத்து மொழிந்துமல்லோ
சொந்தமுடன் என்னாளுஞ் சீடனாக்கி
சுந்தரனே மகுத்துவங்கள் கூறினாரே.

கூறினார் வெகுகோடி இதிகாசங்கள்

கொற்றவனே சமாதிமுறைப் பாடுஞ்சொல்லி
தேறியே சிலகால மங்கிருந்து
தேற்றமுடன் வையகத்து அதிசயங்கள்
மீறியே தானுணர்ந்து குளிகைபூண்டு
மிக்கான நாடுபதி தேசமெல்லாம்
கோறியே தேசமெல்லாம் அதிதம்பூண்டு
கொற்றவனே எந்தனுக்கு அருள்தந்தாரே.

தந்தாரே எந்தனுக்கு கோடியாகச்

சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும்
அந்தமுடன் எந்தனுக்கு அதிதமார்க்கம்
அப்பனே தாமுரைத்துப் போகஎன்று
இந்தமாநிலத்தில் உள்ளமகிமை எல்லாம்
ஏற்றமுள்ள குளிகையினால் அறிந்துகொண்டு
விந்தையுடன் பாடிவைப்பேன் சப்தகாண்டம்
விண்ணுலகம் மண்ணுலகம் இடங்கொள்ளாதே.

கொள்ளாதே போகர்ஏழாயிரந்தான� �

கொற்றவனே நாதாக்கள் கூறவில்லை
எள்ளளவும் பிசகாது இந்நூலப்பா
இணையான நூலுக்கு எதுவேதென்றால்
கள்ளமிலாக் கும்பமுனி சொன்ன நூலாம்
காசினியில் பெருநூலாம் பேதமுண்டோ
தள்ளவுந்தான் போகாத காண்டமப்பா
தருவான பன்னீரா யிரம்தாமே.

பன்னீராயிரம் என்னும் நூல்தானப்பா

பயிலான காண்டமது பனிரெண்டுமாகும்
சொன்ன மொழிதவறாது துய்யபாலா
துகள்அகற்றிப் பன்னீராயிரம்தான் சொன்னார்
கண்ணியமாய்ப் பனிரெண்டு காண்டம்சொன்னார்
கண்மணியே ஆயிரத்துக்கொரு காண்டந்தான்
உன்னித மாய்இந்நூலுக் குவமைகூறி
உத்தமனார் பாடிவைத் தாருண்மைதானே.

உண்மையாம் என்நூலைக் கண்டறிந்து

உத்தமனே கும்பமுனி நூலைப்பாரு
திண்ணமுடன் பனிரெண்டு காண்டம்பாரு
தீர்க்கமுடன் ரகசியங்கள்எல்லாம� � விள்ளும்
நன்மைபெற மோட்சவழி கதியேகொள்வார்
நாதாந்தக் கும்பமுனி முன்னேநிற்பார்
தண்மையுள்ள சாத்திரந்தான் பெருநூலப்பா
தகமையுள்ள பனிரெண்டு காண்டம்பாரே.

பாரேதான் அகஸ்தியனார் கோடிநூல்கள்

பாருலகில் பாடிவைத்தார் மறைப்புமெத்த
நேரேதான் பெருநூலின் மார்க்கம் எல்லாம்
நேர்மையுள்ள என்னூல்போல் விள்ளலாகும்
சீரேதான் பனிரெண்டு காண்டமாக
சிறப்புடனே பாடிவைத்தார் புலஸ்தியற்கு
வேரேதான் சாத்திரங்கள் பார்ப்பதுண்டோ
பார்த்தாலும் பெருநூலுக்கு ஒவ்வாது அன்றே.

அன்றான சாத்திரங்கள் அனந்தங்கோடி

அளவில்லா சூத்திரங்கள் கணக்கோ இல்லை
குன்றான மலைபோலே குவித்துவைத்தார்
கொடிதான சாத்திரத்தின் மகிமைஎல்லாம்
தென்திசையில் கும்பமுனிசெய்த நூல்கள்
தேசத்தில் பாதிஉண்டு ஆயுர்வேதம்
வென்றிடவே பதினெண்பேர் செய்நூல்கள்
வேட்கமுடன் மறுபாதி என்னலாமே.

என்னவேகும் பமுனிஎன்ற நாமம்

எழிலான அகஸ்தியரின் நாமமாகும்
பன்னவே அகஸ்தியனார் என்ற நாமம்
பலபலவாம் சாத்திரத்தில் முறைபாடாக
துன்னவே கும்பமுனி என்றுமேதான்
துப்புரவாய் எப்போதும் வழக்கம்பாரு
சொன்னதொரு நூல்களிலே மகிமைகோடி
தோறாமல் பாடிவைத்தார் முனிவர்தாமே.

முனியான சாத்திரங்கள் பலநூல்கோர்வை

மூதுலகில் பாடிவைத்தார் சித்தார்எல்லாம்
கனியான நவகனியாம் நூல்தானப்பா
கருத்துடனே பனிரெண்டு காண்டம்சொன்னார்
பனியதுதான் சூரியனைக் கண்டாற்போலே
பறக்குமடா பனிரெண்டு காண்டமுன்னே
தொனிபோன்ற சாத்திரங்கள் களவுமார்க்கம்
துப்புரவாய்க் காவியத்துக் கொவ்வாதன்றே.

அன்றான சாத்திரமாங் கோர்வையப்பா

அப்பனே பனிரெண்டு காண்டம்சொன்னார்
குன்றான மலைபோல கோடித்தங்கம்
கொட்டினார் பனிரெண்டு காண்டத்துள்ளே
சென்றிடவே வயித்தியமும் வாதமார்க்கம்
செயலான யோகமுதல் ஞானமார்க்கம்
வென்றிடவே மாந்திரீகம் மாரணவேதம்
வேண்டியதோர் கருமானம்மிக உண்டாமே.

உண்டான சாத்திரத்தில் இல்லாமார்க்கம்

உத்தமனே பெருநூலில் காணலாகும்
கண்டாலும் விடுவாரோ பெருநூலப்பா
காசினியில் பனிரெண்டு காண்டந்தன்னை
விண்டதொரு பொருளெல்லாம் அதிலேதோயும்
வித்தகனே மற்றோர் நூல் காண்பதில்லை
சண்டமாருதம் போலே பனிரெண்டுகாண்டம்
சங்கையற ஆயிரத்துக்குஒரு காண்டம்தானே.

சங்கையில்லா பெருநூலைப் பார்த்தபேர்கள்

சாயுச்சிய பதவிதனைப் பெறவேயாகும்
இங்கிதமாய்ப் பெருநூல்கள் பார்க்கமாண்பர்
எழிலான சாலோக சாமீபம்தான்
அங்கமுடன் சாரூபபதவி மூன்றும்
அப்பனே கிட்டுவதும் அரிதேயாகும்
புங்கசித்தி எட்டுவித போகம்தன்னை
புகழுடனே பெருநூலோர் காண்பார்தானே.