best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, November 5, 2010

சிவவாக்கியர் தைமாதம் மக நக்ஷத்திரத்தில் சிம்ம ராசியில் பிறந்தவர். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். "காசியில் செருப்புத்தைத்த ஒரு சித்தரே இவரது ஞானகுரு.

அவர், " சிவவாக்கியா! பஞ்சமா பாதகங்கள் புரியாமல் எத்தொழில் செய்து பிழைத்தாலும் அது உயர்ந்ததே" என்பார்.

பயிற்சி முடியும் தருவாயில் "சிவவாக்கியா! இந்தப் பேய்ச்சுரைக்காயை கங்கையில் அமிழ்த்தி எடுத்துவா" என்றார் குருநாதர்.

'எதற்கு' என்று கேட்காமல் கீழ்படிந்தார் சீடர்.

இவ்வளவு காலமும் சிவவாக்கியாரின் பணிவை பார்த்த குரு நாதர்....

“அப்பா! சிவவாக்கியா! முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி பேய்ச்சுரைக்காயையு கொடுத்து “இதை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார்.

அதோடு..... கொஞ்சம் மணலையும் கொடுத்து " இவை இரண்டையும் சமைத்துத் தருபவளை மணந்து கொள். அவள் உனக்கு ஏற்றவளாயிருப்பாள்" என ஆசீர்வதித்தார்.

சிவவாக்கியருக்கு கட்டு மஸ்தான உடல்வாகு, கருணையான முகம்.சுருட்டை முடி. பல மங்கையர் அவரை மணக்க ஆசை கொண்டனர். அவரது நிபந்தனையைக் கேட்டதும் பைத்தியக்காரன் என்று ஒதுங்கினர்.

ஆயின் சிவவாக்கியர் நம்பிக்கை தளரவில்லை. ஒருநாள் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதியில் நுழைந்தார்.

ஒரு கூடாரத்திலிருந்து வெளிவந்த ஒரு நங்கை ஏதோ உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கினாள். "அம்மணி உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?" என்று கேட்டார் அவர். "இல்லை முனிவரே என்றாள் அந்நங்கை.

"உன்பெற்றோர்கள் எங்கே?"

"சாமி அவர்கள் வனத்தில் மூங்கில் வெட்டச் சென்றிருக்கின்றனர். மூங்கிலைப் பிளந்து முறம் செய்து கிராமத்தில் விற்று வயிறு வளர்க்கிறோம் சாமி! அது தான் எங்கள் குலத் தொழில். நீங்க பசியோடு இருக்கிறமாதிரித் தோன்றுகிறதே.

"என்ன சாப்பிடுவீங்க? " என்று கேட்டாள்.

"இதோ இவற்றைச் சமைத்துத் தரவேண்டும்" என்று பேய்ச்சுரைக்காயையும் மணலையும்
காண்பித்தார்.

அவள் சற்று யோசித்தாள்... இவரிடம் ஏதோ விசேடத் தன்மையிருக்கின்றது. நம்மைச் சோதிக்கிறார். முடியாததைச் செய்யச் சொல்வாரா? என்று எண்ணி அவற்றைப் பணிவோடு வாங்கிக்கொண்டு போனாள்.

அடுப்புப் பற்றவைத்து பானையில் நீர்வார்த்தாள்.... நீர் கொதித்ததும் சிவபெருமானைத் தியானித்து அதில் மணலைக் கொட்டினாள். என்ன ஆச்சரியம். சற்று நேரத்தில் மணல் பொல பொலவென்று சாதமாகப் பொங்கி வந்தது. கிளறிவிட்டாள். சாதம் வெந்ததும் இறக்கி வைத்தாள். பேய்ச்சுரைக்காயை நறுக்கி பொறியலாகவும், கூட்டாகவும் செய்தாள்.

"ஐயா! உணவு தயாராகிவிட்டது. சாப்பிட வாருங்கள்" என்று அழைத்தாள் முனிவரை. மணலை எப்படிச் சமைப்பது என்று இவள் தர்க்கவாதம் செய்யவில்லை. இவளேநமக்குத் தகுந்தவள்' என்றெண்ணியபடி உணவு அருந்த அமர்ந்தார் சிவவாக்கியர். பொல, பொல என்று அன்னமும், பேய்ச்சுரைக்காய் கூட்டும், பொறியலும் இலையில் விழுந்தன. ஒருபிடி உண்டார். பேய்ச்சுரைக்காய் கசந்து ருசிக்காமல் அமுதமாக இருந்தது. கங்கை மாதாவும் கற்ப்புக்கரசியும் தொட்டதின் பலன் என்பதை உணர்ந்தார்.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அப்பெண்ணின் பெற்றோரும் வந்துவிட்டனர்.
சிவவாக்கியரைப் பணிந்தனர்.

"உங்கள் புதல்வி எனக்கு வாழ்க்கைத் துணைவியானால் என் வாழ்க்கை சிறக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் எண்ணம் எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள்" என்றார்.

குறவர்கள் கூடிப் பேசினர்."சாமி! உங்களுக்குப் பொஞ்சாதி ஆக எங்க குலப் பொண்ணு எம்புட்டுப் புண்ணியம் செய்திருக்கோணும்! ஆனா, அவ எங்களுக்கு ஒரே மக! அவளைக்கண் காணாமக் கொடுக்கமுடியாது சாமி! எங்க கூடவே நீங்க இருக்கிறதானா நாளைக்கே கல்யாணத்தை நடத்திடலாம்" என்று சொல்லி ஆர்வத்தோடு அவர் முகத்தைப் பார்த்தான் பெண்ணைப் பெற்றவன்.

சிவவாக்கியர் சம்மதிக்க நரிக்குறவ மரபுப்படி திருமணம் நடந்தது. மூங்கிலை வெட்டி முறம் செய்யக் கற்றுக்கொண்டார் சிவவாக்கியர். கொங்கணர் இவரைப் பார்க்க அடிக்கடி வருவார். ரசவாதம் தெரிந்தவரான சிவவாக்கியர் வறுமையில் வாடுவதை அறிந்து சிவவாக்கியர் இல்லாத நேரமாய்ப் பார்த்து அவர் குடிலுக்கு வந்தார் கொங்கணர்.

அவர் மனைவியிடம், "அம்மணி! பழைய இரும்புத்துண்டுகள் இருந்தால் எடுத்து வா" என்றார். அவளும் கொண்டுவந்து அவர் முன் வைத்தாள். அவற்றைத் தங்கமாக்கி அவள் கையில் கொடுத்துச் சென்றார் கொங்கணர். சிவவாக்கியர் மூங்கில் வெட்டிச் சேகரித்து தலையில் சுமந்துகொண்டு வந்ததும் அவரிடம் கொங்கணர் வந்து சென்றதைச் சொல்லி தங்கத் துண்டுகளைக் காண்பித்தாள்.

"இது பாஷாணம். இதைக் கொண்டு பாழுங்கிணற்றில் போடு." என்றார்.

நல்ல குலமகளாதலால் கணவர் சொன்னபடி சிறிதும் முகம் மாற்றம் இல்லாமல் அவறைக் கொண்டுசென்று கிணற்றில் எறிந்து வந்தாள் அவள். மறு முறை கொங்கணர் வந்த போது கொங்கண முனிவரே! அறவழியில் எங்கள் இல்லறம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குப் புறம்பாக வேறு மார்க்கத்தில் இயமனைக் கொண்டு வரலாமா?" எனவும் கொங்கணரால் பதில் ஏதும் பேச முடியவில்லை.

ஒரு நாள்... முதிர்ந்த மூங்கிலை வெட்டினார், சிவவாக்கியர். அதிலிருந்துதங்கத் துகள் கொட்டியது. "ஐயோ! எமன்" என்று அவர் ஓட நான்கு குறவர்கள் அதைச் சேகரித்தனர். தங்கத் துகள்களை பங்கீடு செய்கையில் அவர்களுக்குள் சண்டை வந்து நான்கு பேரும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு மடிந்தனர். " அப்போதே சொன்னேனே கேட்டார்களா! தங்கம் எமனாக மாறிக் கொன்றுவிட்டதே" என்று அங்கலாய்த்தார் முனிவர்.
சிவவாக்கியர் நாடிப் பரிட்சை என்ற நூலை இயற்றியுள்ளார். இவர் கும்பகோணத்தில் சித்தியடைந்தார்.

சிவவாக்கியார் சித்தர் பாடல் ஞானத்தெளிவை ஊட்டுபவை. அவரது பாடல்களில் ஞானம் தொனிக்கும்.

"நட்டகல்லை தெய்வம்என்று நாலுபுஷ்பம் சாத்தியே !
சுற்றிவந்து முனுமுனுவென்று சொல்லும் மந்திரம்ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ?
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவைதான் அறியுமோ?"

இது எளிமையாகவே பொருள் விளங்கி கொள்ளும் பாடல்,

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை!
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்,
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்,
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே!!

சீவனாம் சிவன் தன்னுள்ளே எப்படி கலந்துள்ளது, என்பதை அவர் பாடுகிறார் பாருங்கள். ஓடி ஓடி ஓடி ஓடி (நான்குமுறை) சாதாரணமாக இல்லை மிக மிக மிக மிக ஆழமாய் தன்னுள் கலந்துள்ளது. அதை நாடியவர்களும் இங்கே கவனிக்க வெண்டும் நாடினார்கள். ஆனால் இறை தன்னை அடையும் வழி தெரியாமல் நாடுகிறார்கள் என்று அதைத்தான் அவர் கூற வருகிறார். அப்படி நாடியும் கண்டுகொள்ள இயலாது வாழ்வின் நாட்களும் கழிந்துபோய், உடல் வாடி, உள்ளமும் நொந்து வாடி மாண்ட மனிதர்கள் (மனுக்கள்) கோடான கோடியாம்.


இங்கே இன்னொரு பாடலும் நினைவிற்கு வருகிறது...... திருமூலர் பாடல் ஒன்றில்


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
- திருமந்திரம் (1823)

சிவவாக்கியர் போக முனி பட்டினத்தார், தாயுமானவர் ஆகியவர்களால் பாராட்டப் பெற்றவர்.

ஆக தெளிந்தவர் எல்லாம் விடை பெற்று விட்டார். எல்லோரும் தெளிய நல்ல குரு வாய்க்கட்டும் இறையருளால்.

0 Comments:

Post a Comment



TIME