best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, November 12, 2010


திருவடியே சரணம்!

மண்ணில் உதித்த மகான்களின் தரிசனம்

கடடிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்








‘குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பார்’ என்பார்கள். ஆனால், நம் பாரத தேசத்தைப் பொறுத்தவரை குமரன் மட்டுமல்ல... குறைவில்லா அருளை வழங்கக் கூடிய சித்தர்களும் இருப்பார்கள் என்பது நிதர்சனம். இதற்கு ஆதாரமாக இந்திய தேசத்தில் உள்ள எண்ணற்ற மலைகளைச் சொல்லலாம்.

காலாங்கிநாதர், சட்டைமுனி, ராமதேவர், கோரக்கர் இப்படி எண்ணற்ற சித்த புருஷர்களோடு சம்பந்தப்பட்டது சதுரகிரி.

பாம்பாட்டிச் சித்தர் தவம் இருந்து ஸித்துக்கள் புரிந்த இடம் மருதமலை.

பின்னாக்குச் சித்தர் வசித்த பேறு பெற்றது சென்னிமலை.

சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் போன்ற எண்ணற்ற தவசீலர்கள் வாழ்ந்து, இறையருள் பெருகிய பூமி திருவண்ணாமலை.

ஆதிசங்கரர், மகா அவதார் பாபாஜி போன்ற எண்ணற்ற மகா புருஷர்கள் உலவிச் சிறப்பித்த பிரதேசம் - இமயமலை.

தவிர வெள்ளியங்கிரி, கொல்லிமலை, பர்வதமலை போன்ற எண்ணற்ற மலைகள் எல்லாம் சித்தர்கள் அருள் நிரம்பிய சிலிர்க்க வைக்கும் சாகசச் சிகரங்கள்!

இந்த வரிசையில் மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும், காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின் (காகபுஜண்டர் என்றும் சொல்லப்படுவதுண்டு) பெயரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது. ஆம்! அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள். மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரம் கொண்டது இந்த மலை. 

இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளது. தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.

இந்த மலையின் புராணப் பெருமைகளை உணர்ந்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், இதைத் தன் தவப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இங்கே அமர்ந்தார். ‘காகபுசுண்டர் மலை, பழநிமலையைப் போன்றது’ என்றே மாயாண்டி சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவாராம். ‘குன்றக்குடியில் வெள்ளி ரதம் ஓடுவது போல் காகபுசுண்டர் மலையிலும் வெள்ளி ரதம் ஓடப் போகுது’ என்று சுவாமிகள் தன் காலத்தில் பக்தர்களிடம் அடிக்கடி கூறி வந்தாராம். சுவாமிகளின் திருவாக்கு மெய்யாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவரது பக்தர்களின் நம்பிக்கை. காகபுசுண்டர்மலையில் - என்னென்ன திருப்பணிகள் நடக்க வேண்டும் என்று மாயாண்டி சுவாமிகள் திட்டமிட்டாரோ, அவை அனைத்தும் இப்போது மெள்ள மெள்ளப் பூர்த்தி ஆகி வருகின்றன. 

மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோயிலையும், காகபுசுண்டர் மலையையும் தற்போது நிர்வகித்து வருகிறது ‘சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம்’. இதன் செயலாளராக இருந்து வருபவர் இரா. தட்சிணாமூர்த்தி. மாயாண்டி சுவாமிகளுடன் உடன் இருந்து அவர் இட்ட திருப்பணிகளை எல்லாம் செய்து முடித்த இருளப்பக் கோனாரின் கொள்ளுப் பேரன் இவர். 

இரா. தட்சிணாமூர்த்தி நம்மிடம், “எங்கள் குலத்தையே வாழ வைத்து வரும் மாயாண்டி சுவாமிகள் தன் காலத்தில் கண்ட கனவு ஒவ்வொன்றையும், அவரது அருளாசியுடன் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறோம். அவரது திருவாக்கின்படி மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி ஆலயம் கல் திருப்பணியாக நடந்து வருகிறது. மலை மேல் நடந்து செல்வதற்குப் படிகள் அமைத்திருக்கிறோம். விரைவில் கும்பாபிஷேகம் காண இருக்கிறது இந்த தண்டபாணி திருக்கோயில். மலை ஏறும்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆஞ்சநேயர் ஆகிய திருச்சந்நிதிகளைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் தனிச் சந்நிதியில் கோலாகலமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீதண்டபாணி. தவிர ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமீனாட்சி- சுந்தரேஸ்வரர், பள்ளிகொண்ட பெருமாள் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு. இதை எல்லாம் செய்வது நாங்கள்தான் என்றால், அது உண்மை அல்ல. சுவாமிகள் எங்களுடன் இருந்து ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றிக் கொள்கிறார் என்றே சொல்ல வேண்டும்” என்றார் அடக்கத்தோடு. 

எங்கே இருக்கிறது காகபுசுண்டர் மலை?

சோமசுந்தரப் பெருமானும் அன்னை மீனாட்சியும் அருளும் மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. திருப்பரங்குன்றத்துக்குள் வந்து விட்டால், மலை மேல் இருக்கும் ஸ்ரீதண்டபாணி பெருமான் திருக்கோயிலை எங்கிருந்து வேண்டுமானாலும், காண முடியும். தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் இருந்து சுமார் பத்து நிமிட நடை தூரம். காகபுசுண்டர் மலை உச்சியில் ஸ்ரீதண்டபாணியைத் தரிசிக்கச் சென்றால், அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் பூஜைக்கான மணி ஓசை ஒலிப்பதைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. ஆனந்தமான சூழல். ரம்மியமான காட்சிகள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் அனைத்துக் கோபுரங்களையும், காகபுசுண்டர் மலையின் உச்சியில் இருந்து தரிசிக்க முடியும்.

மாயாண்டி சுவாமிகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் இந்த மலைக்கே அதிபதியாகத் திகழ்பவரும், பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவருமான காகபுசுண்டரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

பெறற்கரிய மிக அபூர்வமான ஆற்றல்களையும், தவ வலிமையையும் தன்னகத்தே கொண்டவர் காகபுசுண்டர். இவர் சாதாரண பிறப்பல்ல... சிவபெருமானின் அற்புத சக்தியால் தோன்றியவர் என்பதை போகரும் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

உரைத்துமே புசுண்டரது பிறப்பைக் கேளாய்

உகந்த மதுவுண்டுஅன் னங்களிக் கும்போது

பரைத்துமே பரிதிமுதல்சோ மனையும் தரித்த

பராபரமும் பார்ப்பதியும் பார்த்தா ரத்தை

நிறைத்துமே சிவகளைதான் காகம்போல

நேர்ந்தணைய அன்னமங் கேநிறைகர்ப்ப மாயிற்றே

இரைத்துமே இருபதிற் றொன்று பிள்ளை.

அதாவது போகருடைய இந்தப் பாடல் சொல்லும் பொருளும் கதையும் இதுதான் - 

புசுண்டரது பிறப்பைப் பற்றிச் சொல்கிறேன், கேள் (காகபுசுண்டர் என்பது பிற்பாடு வந்த பெயர். ஆதியில் இவர் பெயர் புசுண்டர்). தேவலோகத்தில் ஒரு முறை சிவனுக்கும் சக்திதேவிக்கும் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஆடலும் பாடலும் அமர்க்களப்பட்டன. வந்திருந்தோருக்கு விருந்தும் பரிமாறப்பட்டது. அப்போது அங்கிருந்த சுண்டன் என்கிற காக்கையும், தேவியின் பரிவாரங்களான ஏழு அன்னப் பறவைகளும் மது உண்ட மிகுதியால் கூடிக் களித்தன. இதனால் ஏழு அன்னங்களும் இருபத்தோரு அன்னக் குஞ்சுகளையும், ஒரு காகத்தையும் முட்டையாக இட்டுக் குஞ்சு பொரித்தன. அந்தக் காக்கைக் குஞ்சே - பின்னாளில் காகபுசுண்டர்.

காகபுசுண்டரின் முதல் அவதாரம் இதுதான். இதன் பின்னர் பாம்பு, மனிதன் என்று எண்ணற்ற அவதாரம் எடுத்தார். எத்தனையோ கல்பம் வாழ்ந்தார். எத்தனையோ பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும், எத்தனையோ பிரம்மாக்கள், விஷ்ணுக்கள், சிவபெருமான்கள் அழிந்து போனதையும், பிரளய காலத்துக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்படும்போது இருந்த ஒரே ஒரு ஜீவன் - காகபுசுண்டர் மட்டுமே! ஸ்ரீராமபிரானின் ஞானகுருவான வசிஷ்ட மகரிஷிக்கே பல அரிய அற்புதங்களைச் சொல்லிக் கொடுத்தார். வசிஷ்டரின் ஏழாவது பிறவி இது என்று அவருக்கே சொல்லி, திகைப்பை ஏற்படுத்தியவர் காகபுசுண்டர். நான்கு யுகங்களும் மாறி மாறி வந்ததைத் தான் நான்கு முறை பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார்ர். இதே செய்தியை,

சேதமொன்று மில்லாமல் மவுனமுற்று

சிறப்பாக எத்தனையோ யுகங்கள் கண்டு

வேதமென்ற பிரம்மத்தி லடங்கிக் கொண்டு

வெகு கோடியுகங்கள் வரை இருந்திட்டேனே

என்று இவரைப் பற்றிக் குறிப்பு சொல்கிறது ‘காகபுசுண்டர் பெருநூல் காவியம்’. 

பங்குனி மாத உத்திர நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தார் காகபுசுண்டர் என்பது ஒரு குறிப்பு. ஞான காவியம், காகபுசுண்டர் பெருநூல் காவியம், காகபுசுண்டர் மெய்ஞான விளக்க சூத்திரம், உபநிடதம் - இப்படிப் பல நூல்களை எழுதி உள்ளார் இவர். காகபுசுண்டர் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார் என்பதே சித்தர் வழிபாட்டாளர்களின் நம்பிக்கை. காகபுசுண்டரின் மனைவி பெயர் பகுளாதேவி என்றும், தம்பதி சமேதராக இருவரும் கள்ளக்குறிச்சி அருகே தென் பொன்பரப்பு என்கிற கிராமத்தில் சமாதி அடைந்ததாகவும் ஒரு தகவல் (மாறுபட்ட கருத்தும் உண்டு).

ஆக, காகபுசுண்டரின் வரலாறு, மிகப் பெரிது. அதற்குள் நாம் போக வேண்டாம். மதுரை திருப்பரங்குன்றத்தில் இருக்கும் இந்தக் காகபுசுண்டர் மலைக்கு மச்சமுனி வந்து, உபதேசம் பெற்றுச் சென்றதாகவும் ஒரு குறிப்பைச் சொல்கிறார்கள் திருப்பரங்குன்றத்துக்காரர்கள். இருக்கலாம்தானே! மதுரைக்கும் மச்சமுனிக்கும் தொடர்பு இருப்பதாக நூல்கள் தெரிவிக்கின்றன. “மச்சமுனி சமாதி ஆனதே திருப்பரங்குன்றம் மலைதான். மலைக்கு மேல் அவரது சமாதி இருக்கிறது” என்கிறார் மதுரை அன்பர் ஒருவர். அப்படி இருக்கும்போது தனக்கு உபதேசம் செய்த காகபுசுண்டர் குடி கொண்ட மலையை எந்நேரமும் தான் பார்த்தபடி இருக்க வேண்டும் என்பதற்காக, மச்சமுனி இங்கே சமாதி ஆகி இருக்கலாமே (முரண்பட்ட கருத்துகளும் உண்டு). 

வாருங்கள், கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் வருவோம்!

மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இங்கிருந்து தென்புறம் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கட்டிக்குளம். பல ஞானியர் இங்கே சமாதி கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் - அதாவது போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் நடையாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கிச் செல்வதற்கு திருமடங்கள் கட்டிக்குளத்தில் இருந்தன. உணவருந்தவும், ஓய்வெடுக்கவும் இந்தத் திருமடங்களை சாதுக்களும் யாத்ரீகர்களும் பயன்படுத்தி வந்தனர்.

கட்டிக்குளத்தில் அப்போது இருந்து வந்தவர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் எனும் சித்த புருஷர். இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும், தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரது சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும், அதன் பின் அவரது சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்த சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.

மாயாண்டி சுவாமிகளின் அவதா-ரத்துக்கு வருவோம். கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர் - கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழில். தவிர, உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது. அகிலத்தையே ஆளப் பிறந்த அந்த மகவுக்கு ‘மாயாண்டி’ எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு. பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது.

தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்து விட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்து விட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது.

குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், “ஐயனாரப்பா... எம் மகனைக் காப்பாத்து” என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. ‘மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது’ என்பதை அப்போது உணர்ந்து கொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.

பள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிகத் தேடல் மறுபக்கம் என இருந்தார் மாயாண்டி. தன் வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்தியச் சுவடிகளையும், சித்தர் நூல் தொகுதிகளையும் தூசி தட்டி எடுத்துப் படித்தார். வியந்தார். அவ்வப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று அதிகாலை பூஜையையும், அர்த்தஜாம பூஜையையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார் மாயாண்டி. 

இந்தக் காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த மீனாட்சி எனும் உறவுக்காரப் பெண்மணி, இவருக்கு மனைவியாக வாய்த்தாள். இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு. ஒரு முறை பழநி யாத்திரைக்குச் செல்லக் கையில் பணம் இல்லாததால், மனைவி அணிந்திருந்த தங்க ஆபரணங்களை விற்று, யாத்திரையை மேற்கொண்டார். மாயாண்டியின் ஆன்மிகத் தேடுதல்களுக்கு எந்தத் தடையும் போட்டதில்லை அவரது மனைவி. தவிர, தன் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களுக்கு அவ்வப்போது உணவளித்தும் மகிழ்ந்தார் மாயாண்டி.

மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனை செய்து விட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு - இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார். 

அவரைச் சந்தித்துத் தன்னை சீடனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து அவருக்கு உபதேசம் செய்து வைத்தார். துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தாகி விட்டது. ஆனால், இல்லறத்தில் இருக்கும் மனைவி மற்றும் பெற்றோர் ஆகியோர் இந்த முடிவுக்கு உடன்படுவார்களா? இல்லையே! துறவறம் ஏற்று வீட்டை விட்டுப் புறப்படும் முடிவில் இருந்த மாயாண்டியை எவ்வளவோ தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள் பெற்றோரும், மனைவியும். ஆனால், மாயாண்டி சுவாமிகள் மசியவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து, கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார். சித்தமெல்லாம் சிவ மயம்!

கன்யாகுமரி, கோட்டாறு, சுசீந்திரம், பொதியமலை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை உட்பட பல திருத்தலங்களைத் தரிசித்தார். ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார். மதுரை மீனாட்சி அம்மனும், திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர். இறுதியாக, அவர் வந்து சேர்ந்தது திருக்கூடல்மலை எனப்படும் காகபுசுண்டர் மலைக்கு. இந்த மலையில் உலவும் சித்தர்களோடு கலந்து பேசினார். அரூப நிலையில் இருக்கும் சித்தர்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு ஆசி வழங்கினர். காகபுசுண்டர் மலையைத் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவருக்குள் ஒரு அருள் வாக்கு எழுந்தது.

சௌமிய வருடம் பங்குனி மாதம் சஷ்டி தினத்தன்று இரவு ஒன்பது மணிக்கு விளாச்சேரி பெரியசாமி சிவாச்சார்யர், விராட்டிப்பத்து பொன்னையா சுவாமிகள் மற்றும் சில அடியார்களோடு திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்றார். தரிசனம் செய்தார். அன்றைய இரவுப் பொழுதை சரவணப் பொய்கையில் கழிக்க விரும்பினார். ஈசான்ய மூலையில் உள்ள படித்துறையில் தங்கி, விடிந்ததும் முருகப் பெருமானை தியானித்து குளத்தில் மூழ்கினார். மண் எடுத்தார். அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்து, காகபுசுண்டர் மலையின் மேல் பக்கம் தான் தங்கும் குகையில் பிரதிஷ்டை செய்தார்.

காகபுசுண்டர் மலை அன்றைய தினத்தில் இருந்து மேலும் புனிதத்தைப் பெற்றது. மாயாண்டி சுவாமிகள் ஸித்து விளையாட்டுகள் துவங்கின. 

தரிசனம் செய்ய வாருங்கள்!

தலம்: திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை எனும் திருக்கூடல்மலை.

சிறப்பு: கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி.

எங்கே இருக்கிறது?: மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை.

எப்படிப் போவது?: மதுரையில் அமைந்திருக்கும் பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து திருப்பரங்குன்றத்துக்குப் பேருந்து வசதி அடிக்கடி உண்டு. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்து விடும்.

தொடர்புக்கு:

இரா. தட்சிணாமூர்த்தி, செயலாளர்,

சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம்

திருக்கூடல்மலை என்கிற காகபுசுண்டர்மலை

திருப்பரங்குன்றம்

மதுரை - 625 005.

போன்: 0452 - 248 4714

மொபைல்: 94422 72220




0 Comments:

Post a Comment



TIME